மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் மறியல் போராட்டம்

இந்திய விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து ENB இணைய சுவரொட்டி
புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யூ), அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியன சார்பில், புதுச்சேரி காமராஜர் சிலை, மதகடிபட்டு, பாகூர், காரைக்கால் ஆகிய பகுதிகளில் நேற்று சாலை மறியல் நடந்தது.
போராட்டத்தில், புதிய நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை முழுமையாக திரும்ப பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, வேலை பாதுகாப்பு மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சி.ஐ.டி.யு., தலைவர் தினேஷ்குமார் தலைமையில், காமராஜர் சிலையருகே ஊர்வலம் துவங்கியது. பொது செயலாளர் சீனுவாசன், நிர்வாகிகள் ராமச்சந்திரன், பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அவர்களை பெரியகடை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், நிர்வாகிகள் அண்ணா சாலை – காமராஜர் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர்.
இதே போல், புதுச்சேரியில் தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மறைமலையடிகள் சாலையில் உள்ள பஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொது செயலாளர் அந்தோணி தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அவர்கள் புதுச்சேரி பஸ் நிலையம் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உருளையன்பேட்டை போலீசார், அவர்களை கைது செய்தனர். இரு இடங்களில் நடந்த போராட்டத்தில் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.