SHARE

Saturday, March 20, 2010

அபிவிருத்திக்கு பலம்வாய்ந்த பாராளுமன்றம் அவசியம்

அபிவிருத்திக்கு பலம்வாய்ந்த பாராளுமன்றம் அவசியம்
நாட்டை நேசிக்கும் வேட்பாளரை தெரிவு செய்யுங்கள் ஆளும் கட்சியின் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பலம் வாய்ந்த பாராளுமன்றம் அவசியமாகத் தேவைப்படுவதாக தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாட்டை நேசிக்கும் வேட்பாளர்களை பொதுமக்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்ய வேண்டுமெனக் கூறியுள்ளார்.

கண்டி கெட்டம்பே அரங்கில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டம் இடம்பெற்றது. அங்கு உரைநிகழ்த்திய ஜனாதிபதி மிகவும் ஒழுக்கக் கட்டுப்பாடுடைய சமூகமொன்றை உருவாக்குவதற்கான கடமையை நான் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

மிகுந்த தார்மீக விழுமியங்களைக் கொண்டுள்ளதும் ஒழுக்கமானதுமான சமூகத்தை உருவாக்குவதற்கான ஆணையை மக்கள் தமக்கு இரண்டாவது தடவையாக வழங்கியிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

2005 இல் தான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டபோது ஆளுங்கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் ஒருவரைத் தெரிவுசெய்ய முடியவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்முன்னால் கேள்விக்குறியொன்று இருந்தது. நாங்கள் முன்னோக்கிச் செல்வது தொடர்பாக கேள்விக்குறி காணப்பட்டது. ஆயினும் மக்கள் விரும்பியதை அவர்களுக்கு நாங்கள் வழங்காமல் விட்டுச்சென்றிருக்கவில்லை. சவால்களை வெற்றிகொள்ளக்கூடிய வகையில் எதிர்கால தலைமுறையினரை தயார்படுத்துவதற்கான பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இப்போது இந்த நாடு உங்களுடையது. இதனை சுபிட்சத்தை நோக்கியும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நோக்கியும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு வலுவான பாராளுமன்றம் அவசியமாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சரத் அமுனுகம, மகிந்தானந்த அளுத்கமகே, தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச, எஸ்.பி.திஸாநாயக்கா ஆகியோரும் உரையாற்றினர்.

மலைநாட்டுக்கான தமது விஜயத்தின்போது "மகிந்த ராஜபக்ஷ தகவல் தொழில்நுட்ப நிலையத்தையும் திறந்துவைத்தார். கெட்டம்பேயில் 302 மில்லியன் ரூபா செலவில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலைய திறப்புவிழாவில் மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ,மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்
.

Water crisis in Nuwara Eliya

  Water crisis in Nuwara Eliya due to unchecked contamination activities 14 November 2025 Daily Mirror Despite much concerns regarding the d...