
மாகாண எண்ணிக்கையை ஐந்தாக மாற்றுவதே அரசின் இரகசிய திட்டம்
மனோ கணேசன்
இலங்கை-இந்திய ஒப்பந்தம் வழிகாட்டிய 13வது திருத்தத்தையும் மாகாணசபைகளையும் இல்லாது ஒழித்து இந்நாட்டில் இன்றுள்ள ஒன்பது மாகாணங்களின் எல்லைகளையும் மீளமைத்து அவற்றை ஐந்து மாகாணங்களாக மாற்றுவதற்கு இந்த அரசாங்கம் இரகசிய திட்டம் தீட்டியுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச தலைமையில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த இலக்கை முன்வைத்தே அரசாங்கம் இன்று காய் நகர்த்துகிறது. இந்த தகவலை முடியுமானால் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் மறுக்கட்டும். அதேபோல் அரசில் உள்ள தமிழ் முஸ்லிம் கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும் இதற்கு பதில் சொல்லட்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் சில அரசு சார்பு தீவிரவாத கட்சிகள் தொடர்ந்து பேசி வருவது தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது

இன்று வட மாகாணத்தில் தமிழர்களும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களும் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த மாகாணங்களுக்குள் அடங்கிய மாவட்டங்களிலும் தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த நிலைமை மாற்றப்படும்.

இதுதான் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசாங்கத்தின் தீர்வாகும். இந்த இலக்கை நோக்கியே அரசாங்கம் பயணம் செய்கிறது. இதன் முதல் கட்டமாகவே 13வது திருத்தத்திற்கும் மாகாணசபைகளுக்கும் எதிரான பிரச்சார இயக்கத்தை அரசாங்கம் இன்று தனது பங்காளி கட்சிகள் மூலமும் பாதுகாப்பு செயலாளர் மூலமும் ஆரம்பித்துள்ளது.