SHARE
Thursday, October 15, 2015
போர்க்கைதிகளின் விடுதலைப் போர் நான்காம் நாள்
விடுதலைப் போர் நடத்தும் போர்க்கைதிகளின் உடல் நிலை கவலைக்கிடம்
நான்காவது நாளை எட்டியுள்ள `உண்ண மறுப்பு போராட்ட` போராளிகளில் எழுவர் இராணுவ மருத்துவ மனைகளில் அநுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு அரசியல் கைதிகள் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
14 சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 12ஆம் நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
எனினும், இவர்களின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளையோ, முறையான வாக்குறுதிகளையோ எடுக்காத நிலையில், அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், கைதிகளின் உடல் நிலை பலவீனமடைந்து செல்வதால், நீர் அருந்தும்படி ஆலோசனை வழங்கினர். எனினும் போராளிகள் அதற்கு இணங்கவில்லை.
சிறைச்சாலை ஆணையாளர் ரோகண புஷ்பகுமார மகசின் சிறைச்சாலைக்குச் சென்றும், அமைச்சர் மனோ கணேசனும் மகசின் சிறைச்சாலைக்கு சென்றும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அனுராதபுரம் சிறைச் சாலைக்கு சென்றும், விடுதலைக்கான உத்தரவாதத்தை அளிக்காமல் அரச அடிவருடிகளாக , போராட்டத்தை முறியடிக்க எடுத்த பாசாங்கு முயற்சிகள் வெற்றி அளிக்கவில்லை.
போராட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மகசின் சிறைச்சாலையில் நால்வரும் அனுராதபுர சிறைச்சாலையில் ஒருவருமாக, ஐந்து கைதிகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
நேற்று மகசின் சிறைச்சாலையில் மேலும் ஆறு பேரும் அனுராதபுர சிறைச்சாலையில் ஒருவருமாக ஏழுபேரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மகசின் சிறைச்சாலையில் கே.தயாபரன், கே.சிவாஜி, ரி.நேசமுருகன், எஸ்.உமாகரன், பி.மனோகரன், சகாதேவன் ஆகியோரும், அனுராதபுரவில் கே.கோபிநாத்தும் உடல் நிலை பாதிக்கப்பட்டனர்.
அதேவேளை, கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதன்போது, உண்ணாவிரதம் இருக்கும் கைதிகள் தொடர்பாக வரும் 20ஆம் நாள் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தாம் இன்று சிங்கப்பூர் செல்வதாகவும், அங்கிருந்து திரும்பியதும், கைதிகளின் விடுதலை குறித்து ஆராய்வதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மூன்று நாட்களாக அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை
முன்னெடுக்கின்ற போதிலும், சிறிலங்கா அரசாங்கம் தரப்பில் இருந்து பொறுப்பு வாய்ந்த எந்தப் பதிலும் வழங்கப்படாதுள்ளமை கைதிகள், உறவினர்கள், மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஆதரவாக நேற்றைய தினம் கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாளை வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் பெரியளவில் போராட்டங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன!.
Subscribe to:
Comments (Atom)
How Nato is preparing for war in the Arctic
How Nato is preparing for war in the Arctic Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...
-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...