SHARE

Wednesday, March 16, 2016

வெற்றிச் செல்வி: மரணம் தாண்டியும் மறக்க முடியாது.



மனதின் மடல்

Posted on December 2, 2013  


பிரியமானவனே,
கனவுகளோடும் கேள்விகளோடும்
கழிகிறது வாழ்நாள்.


நீயும் நானுமாய்
கண்ட கனவுகள்
கட்டிய கோட்டைகள்
மண்ணோடு மண்ணாகிப்போனது
உண்மைதான்.

என்றாலும்
உன்னோடு வாழ்ந்த
காலங்கள் போதுமென்று
எப்படி நான் ஆறிக்கொள்ள?

என்னவனே,
உன்னைப்போல்
நம் உறவுகளும்
ஊரவரும்
கண்ட கனவுகள் கொஞ்சமல்ல.
கிழக்கிலே உதயமும்
வடக்கிலே வசந்தமும்
வீசத் தொடங்கியபோதுதான்
நம் கனவுகள் கலைந்தன.

அட, அதுவரையும்
நாம் கனவிலேதான் வாழ்ந்தோமா?
நம்பத்தான் முடியுதில்லை.

இப்போதும்
எல்லாம் கனவுபோலத்தான் இருக்கிறது.

நல்லவனே,
உன் மௌனங்களை
எவரும் எனக்கு
மொழி பெயர்த்துச் சொல்லவில்லை.

அதை புரிந்து கொள்ளாதது
என் மடத்தனமா?
புரிய வைக்காதது
உன் மடத்தனமா?
புரியவே இல்லை.

உன்னோடு வாழ்ந்த
காலங்கள் கொஞ்சமே
என்றாலும் சுகமே.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்
என்பதைப்போல,
உனது அருமையும் பெருமையும்
இப்போது புரிகிறது.

இருந்துமென்ன
நீயில்லாத வாழ்வை
வாழப்பிடிக்குதில்லை.

உன்னோடு பழகிய
அழகிய ஞாபகங்கள்
குடையென விரிந்து
நிழல்களை நினைவுபடுத்துகின்றன.

நம்வீட்டு ரோஜாக்களும்
மல்லிகைகளும்
உதிர்ந்து போனாலும்
அவைதந்த நறுமணங்கள்
மனசைவிட்டு அகலுதில்லை.

தோழனே,
நீ சொல்லித் தந்த தோழமையை
பற்றுப் பாசத்தை
தன்னம்பிக்கையை
மரணம் தாண்டியும்
மறக்க முடியாது.

என் ஆன்மா
அவற்றின் பதிவுகளோடேயே
அடுத்த பிறவி எடுக்கும்.

நெஞ்சம் நிறைந்தவனே,
உன்னை
காதலித்த காலங்களை
பவுத்திரப்படுத்துகிறது மனசு.

நீ இருக்கிறாயா?
இல்லையா?
என் குங்குமத்தை அழித்துக்கொள்ள
எனக்கு விருப்பமில்லை.
அதனால்
நீ இல்லை என்பதை
நான்
ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

நீ தந்த
நம்பிக்கைளோடேயே
காத்திருப்பேன்.

 — வெற்றிச்செல்வி

வெற்றிச் செல்வி: படைப்புகள் கிடைக்கக் கூடிய இடம்


வெற்றிச் செல்வி: போராளியின் காதலி


நாவல் குறித்து DJThamilan  குறிப்பு:

இறுதி ஆயுதப்போராட்டம் வன்னிக்குள் உக்கிரமாகின்ற காலத்தில் (முதல் ஈழப்போரின் இறுதி நாட்களில் ENB), வைத்தியசாலையில் வேலை செய்கின்றவர்களின் மிகவும் துயராந்த வாழ்வு முறையும், காயப்பட்டும், இனித் தப்பவேமுடியாதென குற்றுயிராய் வருகின்ற உடல்களோடும் போராடுகின்ற -நாம் நம் கற்பனைகளில் வரைந்து பார்க்கவே முடியாத- பல இடங்கள் இந்நாவலில் வருகின்றன. 2009ல் யுத்தம் முடிந்து தடுப்பு முகாமில் இருந்தபோது எழுதப்பட்ட நாவல் இதென நினைக்கின்றேன். எனவே அதற்குரிய பலவீனங்கள் பல இருந்தாலும், நாம் கடந்து செல்ல முடியாத ஒரு புதினமாகவே கொள்கின்றேன்.

முக்கியமான வைத்தியசாலைகளில் கொண்டுவரப்படும் காயப் பட்டவர்களைப் பற்றிய சித்தரிப்புக்களை அவ்வளவு எளிதில் எவராலும் கடந்துவரமுடியாது.

வாசித்துக்கொண்டிருந்த ஒருகட்டத்தில் உடல் முழுதும் வியர்த்து, வயிறெல்லாம் பிரட்டுகின்ற நிலைமையில், இந்நூலை வாசிக்காது இரண்டு நாட்களுக்கு தவிர்த்துமிருந்தேன். பிறகு தொடர்ந்த வாசிப்பிலும் இவ்வாறான சம்பவங்கள் எழுதப்பட்ட இடங்களை மேலோட்டமாய் வாசித்து தாண்டிச் சென்றிருக்கின்றேன். 
அந்தளவிற்கு கோராமான, எழுத்தில் வைக்கப்பட்டபோதுகூட மிக உக்கிரமான பகுதிகள் அவை.

இந்நாவலின் ஆசிரியரான வெற்றிச்செல்வி, 90களில் புலிகளோடு இணைந்து அவரது 19வது வயதில் வெடிவிபத்தொன்றில் வலது கையையும், கண்களில் ஒன்றையும் இழந்தவர். முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற ஆயுதப் போராட்டத்தின் இறுதிநாட்கள் வரை இருந்து, ஒன்றரை வருடத்திற்கு மேலாய் இலங்கையரசின் 'புனர்வாழ்வு' மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர். இன்று தனது சொந்த ஊரான மன்னாரில்(?) (மன்னார் நகரின் அடம்பன் கிராமத்தில் ENB) வசித்துக்கொண்டு மாற்றுத் திறனாளிகளோடு இணைந்து பணியாற்றுவதும், எழுதுவதுமாய் இருப்பதாய் அவரைப் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன.

இன்று ஈழத்திலும் புலம்பெயர்ந்தும் எழுதப்பட்ட புதினங்களின் பெரும்பாலானவற்றை வாசித்தவன் என்ற அடிப்படையில் ஒன்றையே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.
இவ்வளவு மிகக்கொடுரமான காலத்தின் நேரடியாகவோ/நேரடியற்றோ சாட்சியங்களாக இருக்கும் நாம் எந்தவகையான அரசியலைப் பேசுவதாயினும் மிகநிதானமாவும், மிகுந்த பொறுப்புணர்வுடன் நம் ஒவ்வொரு வார்த்தைகளையும் பேசவேண்டும் என்பதையே.
 (ஆடி 27, 2015)

http://djthamilan.blogspot.co.uk/2015/09/blog-post.html

வெற்றிச் செல்வி: ஈழப்போரின் இறுதி நாட்கள்


இந்திய-இலங்கை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல்

இந்திய-இலங்கை கடற்றொழிலாளர்கள் பிரச்சனை மீனவர் சங்கங்களிடையே கலந்துரையாடல் இரு நாட்டு கடற்றொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய...