SHARE

Wednesday, March 16, 2016

வெற்றிச் செல்வி: மரணம் தாண்டியும் மறக்க முடியாது.



மனதின் மடல்

Posted on December 2, 2013  


பிரியமானவனே,
கனவுகளோடும் கேள்விகளோடும்
கழிகிறது வாழ்நாள்.


நீயும் நானுமாய்
கண்ட கனவுகள்
கட்டிய கோட்டைகள்
மண்ணோடு மண்ணாகிப்போனது
உண்மைதான்.

என்றாலும்
உன்னோடு வாழ்ந்த
காலங்கள் போதுமென்று
எப்படி நான் ஆறிக்கொள்ள?

என்னவனே,
உன்னைப்போல்
நம் உறவுகளும்
ஊரவரும்
கண்ட கனவுகள் கொஞ்சமல்ல.
கிழக்கிலே உதயமும்
வடக்கிலே வசந்தமும்
வீசத் தொடங்கியபோதுதான்
நம் கனவுகள் கலைந்தன.

அட, அதுவரையும்
நாம் கனவிலேதான் வாழ்ந்தோமா?
நம்பத்தான் முடியுதில்லை.

இப்போதும்
எல்லாம் கனவுபோலத்தான் இருக்கிறது.

நல்லவனே,
உன் மௌனங்களை
எவரும் எனக்கு
மொழி பெயர்த்துச் சொல்லவில்லை.

அதை புரிந்து கொள்ளாதது
என் மடத்தனமா?
புரிய வைக்காதது
உன் மடத்தனமா?
புரியவே இல்லை.

உன்னோடு வாழ்ந்த
காலங்கள் கொஞ்சமே
என்றாலும் சுகமே.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்
என்பதைப்போல,
உனது அருமையும் பெருமையும்
இப்போது புரிகிறது.

இருந்துமென்ன
நீயில்லாத வாழ்வை
வாழப்பிடிக்குதில்லை.

உன்னோடு பழகிய
அழகிய ஞாபகங்கள்
குடையென விரிந்து
நிழல்களை நினைவுபடுத்துகின்றன.

நம்வீட்டு ரோஜாக்களும்
மல்லிகைகளும்
உதிர்ந்து போனாலும்
அவைதந்த நறுமணங்கள்
மனசைவிட்டு அகலுதில்லை.

தோழனே,
நீ சொல்லித் தந்த தோழமையை
பற்றுப் பாசத்தை
தன்னம்பிக்கையை
மரணம் தாண்டியும்
மறக்க முடியாது.

என் ஆன்மா
அவற்றின் பதிவுகளோடேயே
அடுத்த பிறவி எடுக்கும்.

நெஞ்சம் நிறைந்தவனே,
உன்னை
காதலித்த காலங்களை
பவுத்திரப்படுத்துகிறது மனசு.

நீ இருக்கிறாயா?
இல்லையா?
என் குங்குமத்தை அழித்துக்கொள்ள
எனக்கு விருப்பமில்லை.
அதனால்
நீ இல்லை என்பதை
நான்
ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

நீ தந்த
நம்பிக்கைளோடேயே
காத்திருப்பேன்.

 — வெற்றிச்செல்வி

No comments:

Post a Comment

Water crisis in Nuwara Eliya

  Water crisis in Nuwara Eliya due to unchecked contamination activities 14 November 2025 Daily Mirror Despite much concerns regarding the d...