SHARE

Sunday, June 14, 2015

பிரிட்டன் இரகசிய பேச்சுவார்த்தை தொடர்பாக-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்




பிரிட்டன் நாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் அவை மற்றும் அரசாங்க அமைச்சர்கள், சில வெளிநாட்டு முக்கியஸ்த்தர்கள் இணைந்து ஒரு இரகசிய கூட்டத்தை நடத்தியிருப்பதாக அறிய முடிகின்றது. இந்நிலையில் நாம் ஒரு விடயத்தை இங்கே முன்வைக்க விரும்புகிறோம்.

அதாவது பேர்க் ஒவ் பவுண்டேசன் அமைப்பின் ஒழுங்கமைப்பில் நாங்கள் உள்ளிட்ட 6 அமைப்புக்கள் இணைந்து ஒரு வருட காலத்திற்கும் மேலாக ஒரு பேச்சுவார்த்தையினை நடத்தியிருந்தோம். இதில் குறிப்பாக தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு இறுதி தீர்வு என்ன என்பது தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டிருந்தன.

இந்நிலையில் இறுதியாக இந்த அமைப்புக்களுக்கிடையில் ஒரு பொது உடன்பாடு வந்த நிலையில் அதில் 3 விடயங்களில் இதே தமிழ் தேசிய கூட்டமைப்பும் குளோபல் தமிழ் போறம் அமைப்பும் முரண்பட்டன.
அவையாவன,
1) தமிழ்மக்கள் தமது தேசிய இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வினை எதிர்பார்க்கிறார்கள் என்பது தொடர்பில் அறிவதற்கான ஒரு சர்வஜன வாக்கெடுப்பினை நடத்துவது 
2) 13ம் திருத்தச்சட்டத்தை நிராகரிப்பது 
 3) இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொள்வது இவையே அந்த 3 விடயங்கள்.

இந்த விடயங்களை, நிராகரித்த மேற்படி இரு அமைப்புக்களும் இவை தொடர்பில் தங்கள் கட்சி மற்றும் அமைப்பு சார்ந்த தலைவர்களுடன் பேசவேண்டும் என கூறினார்கள். இன்று ஒரு வருடத்திற்கும் மேலாகின்ற போதும் அது தொடர்பில் அவர்கள் பதிலளிக்கவேயில்லை.

இந்நிலையில் இப்போதைய பேச்சுவார்த்தை அப்போது இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் இணக்கப்பாட்டை நிராகரிப்பதுடன் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை நிராகரித்தவர்கள் இன்று இரகசிய பேச்சுக்களை நடத்துவதன் ஊடாக தமிழ் மக்கள் மேலும் ஒரு ஆபத்தை எதிர்கொள்ளப் போகின்றார்கள். என்பதே விடயமாகும் என்றார்.

இன்றைய தினம் கட்சியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

இலங்கை அரசாங்கம் முன்வைத்திருக்கும் தேர்தல் மறுசீரமைப்பு முறையின் ஊடாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள் இல்லாது ஒழிக்கப்படும்.

புதிய தேர்தல் மறுசீரமைப்பிற்கு முன்னதாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய தேர்தல் மறுசீரமைப்பு ஆனது இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தமிழ் பேசும் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இயங்குவதற்கான முயற்சியாகும். இதன் ஊடாக சிங்கள பெளத்த நிகழ்ச்சி நிரலை அவர்களால் சுமுகமான முறையில் கொண்டு செல்ல முடியும்.

இந்நிலையில் புதிய தேர்தல் மறுசீரமைப்பானது நிறைவேற்றப்பட்டால் அதற்கப்பால் தமிழ்பேசும் மககளுடைய அடிப்படை தேவைகள் மற்றும் அரசியல் உரிமைகள் அனைத்தும் மறுக்கப்படும் அபாயமே இருக்கின்றது.

இந்நிலையில் தேர்தல் மறுசீரமைப்பிற்கு முன்னதாக தமிழ் பேசும் மக்களுடைய அடிப்படை தேவைகள் மற்றும் அரசியல் உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும். மேலும் இந்த விடயத்தில் எண்ணிக்கை மட்டுமே பிரச்சினை என சொல்பவர்களும் உள்ளனர்.

ஆனால் ஒரு உதாரணத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 22, முஸ்லிம்களுக்கு 15 மலைய மக்களுக்கு 10 என நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வைத்துக் கொண்டால் அதனை உறுதிப்படுத்தினால் போதும் என சிலர்  கூற முற்படுகின்றார்கள். இது மிகவும் தவறான விடயமாகும்.

இந்நிலையில் 20ம் திருத்தச்சட்டத்தின் மூலம் வரும் தேர்தல் மறுசீரமைப்பானது தமிழ் மக்கள் உட்பட தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுடைய அடிப்படை உரிமைகளை மறுக்கும் அல்லது மழுங்கடிக்கும் நோக்கிலான ஒரு மறுசீரமைப்பாகும்.


No comments:

Post a Comment

Ukraine-Russia peace talks

Ukraine-Russia peace talks: How US envoys and a 28-point plan failed to secure deal... India has significantly increased its diplomatic invo...