SHARE

Friday, November 21, 2014

மைத்திரிபாலவை தலைவராக்குவேன்-சந்திரிக்கா

மைத்திரிபால சிறிசேனவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக்குவேன். அதுவரை இந்தப் போராட்டம் ஓயாது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க சூளுரைத்துள்ளார்.

கொழும்பில் இன்று மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“இது வரலாற்று முக்கியத்துவம் மிக்க நடவடிக்கை.அரசியல் பயணத்தில் மீண்டும் இணைந்து கொண்டதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

மகிந்த ராஜபக்சவை நியமித்த போது என்னை பலர் எதிர்த்தனர்.
அவர் பதவிக்கு வந்த 6 மாதங்களில் – எனது பிறந்த நாளன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து என்னை வெளியேற்றினார்.

எனது மௌனமே கட்சியை நிலைகுலையச் செய்தது. 9 ஆண்டுகள் அமைதியாக காத்திருந்தேன்.அதிகாரத்திலுள்ள தலைவர், பொறுக்க முடியாதளவு கொடுமைகளைச் செய்தார்.

எனது வரலாற்றுப் பதிவை எழுதி வருகிறேன்.

போரில் பெற்ற வெற்றியைப் பாராட்டுகிறேன். ஆனால் போரை வென்றவரை சிறையில் அடைத்தனர்.

அரச ஊழியர்களின் சம்பளம் உயரவில்லை, வாழ முடியவில்லை என மக்கள் வருந்துகின்றனர்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மனிதப் படுகொலை, மோசடிகளே ஆட்சியமைக்கின்றன.காவல்துறை கேவலப்படுத்தப்பட்டுள்ளது. இது பயங்கரமான நிலைமை.

17வது திருத்தச்சட்டம் தூக்கி வீசப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் சிரித்துக்கொண்டே பொய்களைக் கூறி ஆட்சியமைத்து வருகின்றனர்.

எதிர்த்தவர்களுக்கு, எதிர்ப்பவர்களுக்கு வெள்ளை வான் தான்.

என்னை மீண்டும் போட்டியிடுமாறு பலரும் கோரினர். அதிகாரத்தில் இருக்கும் பேராசை எனக்கு இல்லை.

பழிவாங்கும் தலைவர்கள் இருக்கின்றனர். பாதுகாப்பு தேவைப்படுகிறது. எங்களுடைய உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை.

எங்களுக்குரிய சகல வரப்பிரசாதங்களும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன.

பிள்ளைகள் எதிர்க்கின்றனர். எனினும் நாட்டுக்காக தீர்மானம் எடுத்தேன்.

வெளியில் இறங்கும்போது உயிர் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிடும். பயப்படமாட்டேன்.

சத்தியமே எங்கள் பலம். நாம் அதிபர் போராட்டத்தில் இறங்குவோம். சகலரும் வெளியில் வருவதற்கான சந்தர்ப்பம் இது.

மைத்திரிபால சிறிசேனவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக்குவேன்.

அதுவரை இந்தப் போராட்டம் ஓயாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment

Water crisis in Nuwara Eliya

  Water crisis in Nuwara Eliya due to unchecked contamination activities 14 November 2025 Daily Mirror Despite much concerns regarding the d...