SHARE

Sunday, August 21, 2011

முத்தமிழ் உயிர்காக்கும் போராட்டமும், இனமானத் தமிழ் சமரசவாதிகளும்

தமிழகத்தில் முத்தமிழ் உயிர்காக்கும் போராட்டத்தில் `இனமானத் தமிழ் சமரசவாதிகள்` ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பிட்ட ராஜீவ் வழக்கில் மட்டுமல்ல பொதுவாக இந்தியாவில் மரணதண்டை நீக்கப்படவேண்டுமென அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.ராஜீவ் படுகொலை காங்கிரஸ் கட்சியின் உள்முரண்பாட்டைப் பயன்படுத்தி சர்வதேசப் பின்னணியில் நடந்த சதி என்பது இவர்களின் மையமான வாதமாக உள்ளது.இதனால் அவ்வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லையெனவும், இவ்வழக்கு விசாரணையில் பெறப்பட்ட சாட்சியங்கள் தடா சட்டத்தின் கீழ் சித்திரவதைகள் மூலம் பெறப்பட்டவை என்பதும் துணை வாதமாக அமைந்துள்ளது.ராஜீவ் கொலையில் விடுதலைப்புலிகளின் பாத்திரம் மெளனமாக மறைக்கப்பட்டு வருகின்றது.
 
இந்திய இலங்கை ஒப்பந்தந்தத்தின் மேலாதிக்க நோக்கம், இந்திய ஆக்கிரமிப்புப் படையின் போர்க்குற்றங்கள் ராஜீவ் படுகொலைக்கான தூண்டுதலும் நியாயமுமாகும் என்பதை, இந்திய விஸ்தரிப்புவாதத்தின் ஆதரவு நிலைப்பட்ட சந்தர்ப்பவாதம் காரணமாக பேசத்தயங்கி தவிர்த்து வருகின்றனர்.தமிழ் நாடு சட்டமன்றத்தில் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக இந்திய மைய அரசு அறிவிக்கவேண்டுமெனக் கோரிய தீர்மானத்தின் அடிப்படையில்
1) உலகத்தமிழினத்தின் தலைவி செல்வி. ஜெயலலிதாவென்றும்
2) தமிழ்நாடு சட்டசபை இந்தியாவிலேயே மிகக் கட்டுப்பாடான நிறுவனமென்றும்
3) ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாட்டில் உறுதியான தலைமைத்துவம் நிலை நாட்டப்பட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
 
இதனால் தமிழக முதல்வர் மூலம், மைய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கும் பாதையை கடைப்பிடிக்கின்றனர்.`மரண தண்டனை ஒழிப்போம்! மனிதநேயம் காப்போம்!` என்ற நாம் தமிழர் கட்சியின் முழக்கத்தின் கீழ் இவ் `இனமானத் தமிழ் சமரசவாதிகள்` ஒன்று திரண்டுள்ளனர்.இந்த ``மக்கள் இயக்கத்தின்``நோக்கமும் எல்லையும் மாநில அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

1) இந்தியாவில் மரணதண்டனையை நீக்குதல்
2) தடா சட்டத்தின் கீழ், மல்லிகை மாடிச் சித்திரவதை மூலம் பதிவு செய்த பொய் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்கெனவே 21ஆண்டுகள் கடூழியச்சிறைத்தண்டனையை அநுபவித்து முடித்துவிட்ட அரசியல் கைதிகளுக்கு நீதி கோருதல்

ஒரு அடிப்படை ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டமாகும்.இதனால் இப்போராட்டத்தை நாம் ஆதரிக்க முடியும். இக்குறிப்பான கோரிக்கையில் ஒன்றிணைந்து அதன் வெற்றிக்காகப் போராடவும் வேண்டும்.

அதேவேளையில் இவ் ’இனமானத் தமிழ் சமரசவாதிகள்’ தமது வர்க்க இயல்பின் காரணமான அரசியல் சந்தர்ப்பவாதத்தின் விளைவாக தமக்குத் தாமே விதித்துள்ள கட்டுப்பாடுகள், மற்றும் மட்டுப்பாடுகளை ‘மக்கள் இயக்கத்தின் மீதும்’ விதிப்பர். தமது நலன்கள் அடையப்பட்டதும் மக்கள் இயக்கத்தின் முன்னேற்றத்துக்கு முட்டுகட்டைகள் போடுவர்.இதை மீறி இவர்கள் பின்னால் திரளும் ‘தம்பிமார்கள்’மக்கள் இயக்கத்தை தூண்டும் நடவடிக்கையாக தம்மை மாய்த்துக்கொண்டால் ‘தம்பிமார்களை’ அவசர அவசரமாகப் புதைக்கவும் தயங்க மாட்டார்கள் இச்சமரசவாதிகள்! தம்பிமார்கள் ‘தேர்தல் ஜனநாயக இளைஞர்கள்’ என்ற எல்லைக்குள் மட்டுமே ‘போராட’ அநுமதிக்கப்படுவர்!

இவ் ’இனமானத் தமிழ் சமரசவாதிகள்’ புலம்பெயர் ஈழத் தமிழ் மாணவர்களையும், இளைஞர்களையும் குறிவைத்து சீரழிக்கின்றனர்.ஏகாதிபத்திய தாசர்களும், இந்திய விஸ்தரிப்புவாதத்தின் ஆதரவாளர்களுமான இவர்கள் தமது யுத்ததந்திர திட்டத்தில் ஈழப்பிரச்சனைக்கு அளிக்கும் விளக்கத்தை புலம்பெயர் தமிழர் மத்தியில் அவர்களது ‘தமிழ்த் தேசிய ஊடகங்கள்’ மூலமும், முன்னணி அமைப்புக்கள் மூலமும் பரப்பி வருகின்றனர்.

இவற்றைக் கருத்தில் கொண்டு, புதிய ஈழப்புரட்சிகர, மக்கள் ஜனநாயக இளைஞர்கள் ‘விஸ்தரிப்புவாதம் ஒழிப்போம்! விடுதலைப் போராளிகளைக் காப்போம்!’என முழங்க வேண்டும்.

முத்தமிழ் உயிர்காக்கும் போராட்டத்தை, ஜெயலலிதா ஆட்சியைப் பலப்படுத்துவதற்காக அல்லாமல், இந்திய பாசிச மைய அரசை ஜனநாயகப்படுத்தும்,ஈழத்தமிழினத்தின், தமிழீழ தேசத்தின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும், போராட்டத்தின் ஒரு பகுதியாக நடத்த வேண்டும்.
புதிய ஈழப்புரட்சியாளர்கள்

No comments:

Post a Comment

Water crisis in Nuwara Eliya

  Water crisis in Nuwara Eliya due to unchecked contamination activities 14 November 2025 Daily Mirror Despite much concerns regarding the d...