SHARE

Thursday, October 15, 2009

சுற்றுலா பிரதேசமாகும் பாசிக்குடா கடலோரம்

பாசிக்குடா கடலோரப் பிரதேசத்தை முழுமையான சுற்றுலா பிரதேசமாக அபிவிருத்தி செய்ய கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் உயர் மட்டக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. வீரகேசரி இணையம் 10/15/2009 9:55:17 PM -
கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பயணத்துறையில் பிரபல்யம் பெற்றுள்ள பாசிக்குடா கடலோரப் பிரதேசத்தை முழுமையான சுற்றுலா பிரதேசமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடை பெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
வாழைச்சேனை பிரதேச சபை மண்டபத்தில் நடை பெற்ற இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சரின் செயலாளர் ரஞ்சினி; பிள்ளை ,பிரதேச சபைத் தலைவர் தாமோதரம் உதயஜீவதாஸ் உட்பட பல்வேறு திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தற்போது சாதாரண நாட்களில் 2500 தொடக்கம் 3000 பேர் வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இப் பிரதேசத்திற்கு வருகை தருகின்றார்கள்.
விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து காணப்படுவதாக இக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் சுட்டிக் காட்டினர்
எதிர் வரும் காலங்களில் இத் தொகை மேலும் அதிகரிக்கும் என்பதால் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் வசதி கருதி பல்வேறு வேலைத்திட்டங்களை மேற் கொள்ள வேண்டியிருப்பதாக முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இக் கூட்டத்தில் கூறினார்.
அதற்கமைய நவீன வசதிகளுடன் கூடிய விடுதிகள் அமைப்பு ,வாகனத் தரிப்பிடங்கள் அமைத்தல் ,உடைகளை மாற்றுவதற்காக தனியான வசதிகளை ஏற்படுத்ததல் ,சிறுவர்களுக்கான களியாட்ட நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய மைதானங்களை அமைத்தல் ஆகியன தொடர்பாக இக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இப் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணத்துறையில் ஏற்படும் முன்னேற்றம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றமடைவதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளுர் வாசிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் வாயப்புகளையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் இக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
முதலமைச்சரும் அதிகாரிகளும் இக் கூட்டத்தின் பின்னர் பாசிக்குடா பிரதேசத்திற்கும் விஜயம் செய்தனர்.

No comments:

Post a Comment

20 AIADMK to join TVK