SHARE

Monday, January 20, 2014

பாதணிகளை கழற்றி சிங்கள தேசிய கீதத்திற்கு சி.வி மரியாதை

பாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு சி.வி மரியாதை
திங்கட்கிழமை, 20 ஜனவரி 2014 01:13 Tamil Mirror

யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழாவின் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தனது பாதணிகள் இரண்டையும் கழற்றிவைத்து மரியாதை செலுத்தியதை அவதானிக்க முடிந்தது.

300 மில்லியன் ரூபா நிதியில் 120 கட்டில்களைக் கொண்ட இந்த புற்றுநோய் வைத்தியசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக நேற்று ஞாயிற்றுக் கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நாட்டில் 5 புற்றுநோய் வைத்தியசாலைகள் இருக்கின்றன. அதில் 5 ஆவதாக யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வைபவத்தில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன,டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏரான் விக்ரமரட்ண, ஹர்ஷ டி சில்வா, விஜயகலா மகேஷ்வரன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பியான சில்வஷ்டர் அலன்டின், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க வடமாகாண சபையின் உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுஜிர்தன் வடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த வைபவத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அனைவரும் எழுந்து நின்று மரியாதைசெலுத்தினர். பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் உள்ளிட்ட பொலிஸாரும் படைத்தரப்பினரும் தங்களுக்கு உரிய விதிமுறைகளுக்கு அமைவாக மரியாதை செலுத்தினர்.

வடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் கைகளை முன்பக்கமாக குவித்துகொண்டிருந்தார். முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன்  கைகளை வயிற்றுக்கு முன்பாக குவித்துவைத்துகொண்டு நின்றதுடன் அவருடைய பாதணிகள் இரண்டும் கழற்றப்பட்டிருந்தன.

முன்வரிசை கதிரையில் முதலமைச்சர் அமர்ந்திருந்தமையினால் அவர் தனது பாதணிகளை கதிரைக்கு முன்பாக கழற்றிக்கொண்டு அமர்ந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறுதான் அவர் அமர்ந்திருந்தாலும் தேசிய கீதம் இசைக்கப்படும் போது அவர் எழுந்துநின்றமையினால் அவை கதிரையின் அடியில் அல்லது அவருடைய கால்களுக்கு பின்னாலே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
================================================
வாசகர் ஒருவரின் குறிப்பு:

முதலில், வட பகுதித் தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான புற்று நோய் வைத்தியசாலையை நிர்மாணித்துக் கொடுத்துதவிய, ' 'துணிச்சலின் நிறங்கள் நம்பிக்கை', (Colours of Courrage) நிறுவனத்தினருக்கும், அவுஸ்திரேலிய வைத்தியக் கலாநிதியான திரு. தினேஷ் சீவரத்தினம் அவர்களுக்கும் மற்றுமொரு தொகுதிப் பெரு நிதியைத் தமது கால் நடைப் பிரச்சாரப் பயணத்தின் மூலம் சேகரித்துதவிய திருவாளர்கள் நாதன் சிவகணநாதன் மற்றும் சரித்த உனப்புவ போன்றோருக்கும் எமது சிரம் தாழ்ந்த நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும்!

இப் பாரிய நிர்மாணப் பணியில் அரசின் பங்கு எதுவும் இருக்கிறதா, எனத் தெரியவில்லையாயினும், வைத்தியசாலை அமைக்க அனுமதி வழங்கி அங்குரார்பண நிகழ்வில் பங்கேற்று விழாவைச் சிறப்பித்த ஜனாதிபதிக்கும் ஏனைய தலைவர்களுக்கும் நன்றிக்களும் வாழ்த்துக்களும்!
==========================================
இந்நிகழ்வில் விக்கி கூறிய முக்கிய கருத்து:

இன்றைய தினம் இந்தப் புற்று நோய் மருத்துவனையைத் திறந்து வைக்க மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களை அழைத்திருப்பது சாலப் பொருத்தமே. எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று முக்கிய அடிப்படைகளை முன்வைத்துத்தான் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்திருந்தது. அவையாவன-

1.   வன்முறையை விலக்கி முன்னேறல்
2.   நாட்டைப் பிரிக்காது முன்னேறல்
3.   சமஷ்டி முறைமையை அனுசரித்து முன்னேறல்
என்பனவே அவை.

எமது தேர்தல் கொள்கைகளைப் பெருவாரியான வடமாகாண மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதில் இருந்து அவர்களின் மனோநிலையை மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் புரிந்து கொண்டிருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை. ஆகவே வன்முறையைக் களைந்து, நாட்டைப் பிரிவினைக்கு உட்படுத்தாது, அதிகாரங்களைப் பகிர்ந்து கூட்டாக ஒரே நாட்டினுள் வாழ்க்கை நடத்த முன்வந்துள்ள எங்கள் மக்களின் மனோநிலைக்கு இங்கு வருகை தந்திருக்கும் மேன்மை தங்கிய 
ஜனாதிபதி அவர்கள் மதிப்பளிப்பார்கள் என்று நாங்கள் நம்பலாம். எமது தேவைகளைப் புரிந்து இனக் கூட்டுறவுக்கு வித்திடுவார் என்று நம்பலாம். புதியதொரு வாழ்க்கை முறைக்கு வழி கோலுவார் என்று எதிர்பார்க்கலாம். எம்மத்திக்கு அவரைக் கொண்டுவந்த ஏற்பாட்டாளர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
===========================================
======================
குறிப்பு: தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலை திறப்பு விழாச் செய்தியை வெளியிட்ட Global Tamil News Web,அச்செய்திக் குறிப்புக்கு, `மஹிந்தவும் விக்கியும் ஒரே மேடையில் மோதல்` என தலைப்பிட்டிருந்தது.
======================
செய்தி தொகுப்பு  ENB

No comments:

Post a Comment

இலங்கைக் கடலில் 25 இந்திய மீனவர் கைது

இலங்கைக் கடலில்  25 இந்திய மீனவர் கைது எம்.யூ.எம்.சனூன் Tamil Mirror   2026 பெப்ரவரி 16   இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் ...