SHARE

Thursday, August 30, 2012

காலியில் தாக்கப்பட்ட தமிழ்க் கைதி: தலையில் பலத்த அடி, மூளையில் இரத்தக் கசிவு!


காலியில் தாக்குதலுக்குள்ளான தமிழ்க் கைதியின் நிலை மோசம் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்

மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான சுந்தரம் சதீஸ் நேற்று கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு திடீரென மாற்றப்பட்டார்.

வழக்கு விசாரணை ஒன்றுக்காக காலி நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சதீஸ் வழக்குத் தவணையின் பின்னர் சுயநினைவற்ற நிலையில் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவர் நேற்று கொழும்பு தேசிய வைத்திய சாலையின் 50 ஆவது விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அரசியல் கைதியான சதீஸின் மனைவி தனது கணவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவுடன் மனோ கணேசன் நடத்திய பேச்சின் அடிப்படையில் சதீஸ் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்புக்கு மாற்றப்பட்ட தழிழ் அரசியல் கைதியை மனோ கணேசன் குழுவினர் மற்றும் நாடாளுமுன்ற உறுப்பினரான ஜயலத் ஜெயவர்த்தன ஆகியோர்  நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இதன்போது அரசியல் கைதியான சதீஸின் தலையில் கட்டுப் போடப்பட்டுள்ளதுடன் கண் விழித்திருந்தாலும் வருபவர்களை அடையாளம் காணக்கூடிய நிலையில் அவர் இல்லை எனவும் அவரது கால்களில் சங்கலிப் பூட்டுப் போடப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.

இதன்போது கடமையில் இருந்த வைத்தியர் ஒருவரிடம் சதீஸின் நிலைமை குறித்துக் கேட்டபோது தலையில் கடுமையாக அடி பட்டுள்ளது. மூளையில் இருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மூளை தொழிற்பாடு குன்றியுள்ளது எனத் தெரிவித்தார் என்று ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் உதயனுக்குத் தெரிவித்தார்.
===========  யாழ் உதயன்

No comments:

Post a Comment

இலங்கைக் கடலில் 25 இந்திய மீனவர் கைது

இலங்கைக் கடலில்  25 இந்திய மீனவர் கைது எம்.யூ.எம்.சனூன் Tamil Mirror   2026 பெப்ரவரி 16   இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் ...