SHARE

Tuesday, January 12, 2010

விழவில்லைப் புலிகள் ஓயவில்லை தமிழ் ஈழப்போர் - வல்வை மக்கள்

"விழவில்லை புலிகள்- ஓயவில்லை தமிழீழப்போர்" வல்வை மக்கள்
பெருமதிப்பிற்குரிய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு வல்வெட்டித்துறை மக்களின் இரங்கற் செய்தி
திகதி: 10.01.2010 // தமிழீழம்
மறைந்த வேலுப்பிள்ளை அவர்கள் வரலாற்றில் கறைபடியாத வகையில் வாழ்ந்து, தமிழினத்திற்கு வழிகாட்டியாகத் திகழும் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை தமிழினத்திற்கு கொடையாக அளித்து விட்டு சென்றிருக்கிறார்.

கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக நொறுங்கிக் கிடந்த ஒரு தேசிய இனத்தை கட்டியெழுப்பி அதன் அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்த தேசியத் தலைவர் இன்றும் பின்னணியில் இருந்து விடுதலை இயக்கத்தை வழிநடத்தி வருகையில் அவரது தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை மறைவெய்தியிருப்பது உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் பேரிழப்பாக, சோகத்தில் மூழ்கியிருந்த சொந்தங்களுkகு பேரிடியாக வந்து இறங்கியிருக்கிறது.

இவ்வேளையில் வல்வெட்டித்துறை மக்களாகிய நாம் தமிழினத்திற்கு ஆகப்பெரிய கொடையை தந்து சென்றிருக்கும் அன்னாருக்கு தமது இறுதி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தற்போது தலைவரின் தாயார் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டிருப்பது பெற்றோர் இருவரும் எந்தவித காரணமுமின்றியே கைதுசெய்யப்பட்டமையை தெளிவாக்குகிறது.

அவர்களின் வயதையும் கருதாமல் தேசியத் தலைவரின் பெற்றோர் என்ற காரணத்திற்காகவே அவர்களை வெங்கொடுமை சிறையினில் அடைத்து வைத்திருந்தது சிறீலங்கா அரசு. எதுவித சட்டஎதிர்ப்பு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத அவர்களிருவரையும் ஏன் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று உலக நாடுகள், நடுவண் அமைப்புக்கள் ஏதும் தட்டிக்கேட்காதது உலகில் மனிதம் செத்து விட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

அந்த வயதான பெற்றோர் சிறை வைக்கப்பட்டிருந்த காலையில் அவர்களுக்கு சரியான உணவோ சரியான மருத்துவமோ தரப்படவில்லை என்பதை அறிந்து தமிழினமே உள்ளம் கலங்கித் துடிக்கிறது. அரசின் வதை காரணமாகவே வேலுப்பிள்ளையவர்கள் இறந்திருக்கிறார் என்பது கண்கூடாக தெரிகிறது.

இன்று தலைவரின் தாயார் விடுதலை செய்யப்பட்டதைபோல முன்பே அவர்களிருவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தால் தந்தையாரது இறப்பை தள்ளிப்போட்டிருக்கலாம். இருப்பினும் நிகழ்ந்துவிட்ட இழப்பானது தமிழ் பேசும் உலகெங்கும் துன்பச்சூழலை ஏற்படுத்தியிருக்கும் இவ்வேளை மறைந்த மாமனிதர், தேசியத் தலைவரின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு வீர வணக்கத்தையும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் வல்வெட்டித்துறை மக்களாகிய நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் உலகெங்கும் தமிழர் சமுதாய மக்கள் தொடர்ந்தும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் இலட்சியப்பதாகையினை உயர்த்திபிடித்து களம்புக வேண்டியதன் தேவையினை இந்த நேரத்தில் வலியுறித்தி அதன்படி செயல்படுவதே வேலுப்பிள்ளை அவர்களின் ஈகைக்கு நாம் செய்யும் உண்மையான வணக்கமாகும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது பிரிவால் துயருறும் பல்லாயிரக்கணக்கான ஈழமக்கள், குறிப்பாக வல்வை மக்களுக்கும் பார்வதி அம்மையாருக்கும் வல்வெட்டித்துறை மக்களாகிய நாம் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

"விழவில்லை புலிகள்- ஓயவில்லை தமிழீழப்போர்"
வல்வை மக்கள்

No comments:

Post a Comment

Nursing Uniform Reform

Pic:Google-Face Book   Nursing Uniform Reform Calls Grow for Change as Sri Lanka's Dress Code Faces Criticism By Humaira Riyas 17/01/20...