Wednesday 9 October 2024

அநுர குமார திசாநாயக்க ; இலங்கை வானில் ‘ இடதுசாரி ‘ நட்சத்திரம்-டி.பி.எஸ். ஜெயராஜ்

 அநுர குமார திசாநாயக்க ; இலங்கை வானில் ‘ இடதுசாரி ‘ நட்சத்திரம்

டி.பி.எஸ். ஜெயராஜ்

அமெரிக்க பத்திரிகையாளர் எட்கார் சினோவின் ‘ சீன வானில் சிவப்பு நட்சத்திரம் ‘ (Red Star over China ) என்ற நூல்தான் கட்டுரைக்கு இந்த தலைப்பை வைப்பதற்கு தூண்டுதல் அளித்தது. சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங்குடனும் செஞ்சேனையுடனும் தனது ஊடாட்டம் பற்றிய உயிர்களையுடைய விபரிப்பாக அமைந்த அந்த முதலில் 1937 ஆம் ஆண்டில் பிரசுரமானது. மாவோ என்று அறியப்பட்ட மாவோ சேதுங்கைப் பற்றி அந்த நேரத்தில் மேற்குலகில் பெரிதாகத் தெரியாது. பல வருடங்கள் கழித்து மாவோவின் தலைமையில் கம்யூனிஸ்டுகள் சீனாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ‘ சீன வானில் சிவப்பு நட்சத்திரத்தின் ‘ பிரதிகள் பிரமிக்கத்தக்க அளவில் பெரும் எண்ணிக்கையில் உலகெங்கும் விற்பனையானது. சீனாவின் புதிய கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் பற்றி ஒரு உள்நோக்கைப் பெறுவதற்கு அந்த்நூல் பேராவலூடன் வாசிக்கப்பட்டது.

இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க ஒரு அர்த்தத்தில் இன்று இலங்கை வானில் எழுந்திருக்கும் சிவப்பு நட்சத்திரம் அல்லது இடதுசாரி நட்சத்திரமே . அநுரா அல்லது ஏ.கே.டி. என்று பிரபல்யமாக அறியப்பட்ட திசாநாயக்க 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இலங்கையின் ஒனபதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவர் செப்டெம்பர் 23 ஆம் திகதி பதவியேற்றார்.

55 வயதான திசாநாயக்க ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) யினதும் தேசிய மக்கள் சக்தியினதும் தலைவர். ஒரு தீவிரவாத இயக்கமாக இருந்து பிறகு அரசியல் கட்சியாக மாறிய ஜே.வி.பி. ஆறு தசாப்த கால வரலாற்றைக் கொண்டது.

தேசிய மக்கள் சக்தி, ஜே.வி.பி.யையும் வேறு 21 அமைப்புக்களையும் உள்ளடக்கிய இடதுசாரிப் போக்குடைய ஒரு பரந்த கூட்டணியாகும். இந்த அமைப்புக்களில் சிறிய கட்சிகள், தொழிற் சங்கங்கள், உரிமைகள் குழுக்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புகள் அடங்குகின்றன. ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியாகும். திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் திசையறிகருவி சின்னத்தில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.

தேர்தலில் வெற்றி பெற்ற நாளில் இருந்து சர்வதேச ஊடகங்கள் ( மேற்கத்தைய மற்றும் இந்திய ஊடகங்கள்) திசாநாயக்கவை மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட் — லெனினிஸட், சோசலிஸ்ட், நவ மார்க்சிஸ்ட், இடதுசாரி, மத்திய இடது அரசியல்வாதி என்று பலவாறாக வர்ணித்து வருகின்றன. சில இந்திய விமர்சகர்கள் அவருக்கு ‘ இந்திய விரோதி ‘ என்றும் ‘ தமிழர் விரோதி ‘ என்றும் நேர்மையற்ற முறையில் நாமகரணம் சூட்டுகின்றனர். எனது நோக்கில் திசாநாயக்க நிச்சயமாக இடதுசாரிக் கோட்பாடுகளுக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு இடதுசாரி.ஆனால், பாரம்பரிய அர்த்தத்தில் ஒரு மார்க்சிஸ்ட் என்று அழைக்கமுடியுமா என்பது எனக்கு சந்தேகமே.

சில காலத்துக்கு முன்னர் ட்ரம்ப் என்ற ஒரு பேர்வழி ” வெள்ளை மாளிகையை ” அசிங்கப்படுத்துவதற்கு முன்னதாக அந்தக் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதிகள் பரவலாக பெருமளவுக்கு மதிக்கப்பட்டனர். பல அமெரிக்க ஜனாதிபதிகளின் வாழ்க்கைச் சரிதைகள் வாசித்துச் சுவைக்கப்பட்டன. பலர் ஆபிரகாம் லிங்கனையே சிறந்த அமெரிக்க ஜனாதிபதியாக நோக்குவர். அடிமை முறையை ஒழிப்பதற்கும் அடிமைகளின் தளைகளை அறுத்து அவர்களை விடுவிப்பதற்கும் உள்நாட்டுப் போர் ஒன்றையே நடத்தும் அளவுக்கு அவர் சென்றார்.

லிங்கன் மிகவும் எளிமையான பின்புலத்தைக் கொண்ட ஒரு மனிதர். அமெரிக்காவின் அதியுயர்ந்த பதவிக்கு அவரின் உயர்வு ” மரக் கொட்டகையில் இருந்து வெள்ளை மாளிகைக்கான ” ஒரு கதை என்று அழைக்கப்படும். அதே போன்றே திசாநாயக்கவும் கூட இலங்கையின் முதல் குடிமகனாக வந்திருக்கும் ஒரு சாதாரண மனிதரே. அவரின் குறிப்பிடத்தக்க உயர்வையும் கூட ” மண்வீட்டில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு ” வந்த ஒரு காவியம் என்று வர்ணிக்க முடியும். இந்த பின்னணியில்தான் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவை இந்த பத்தி இரு பாகங்களாக ஆராய்கிறது.

தம்புத்தேகம வாழ்க்கை

திசாநாயக்க முதியான்சலாகே அநுரா குமார திசாநாயக்க 1968 நவம்பர் 24 ஆம் திகதி பிறந்தார்.அவரின் பிறந்த இடம் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் கலேவெல ஆகும்.அவரின் பெற்றோர்கள் கண்டிய கொவி பௌத்த சாகியத்தைச் சேர்ந்தவர்கள். திசாநாயக்கவும் அவரது மூத்த சகோதரியும் சிறுவர்களாக இருந்தபோது குடும்பம் வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டதுக்கு குடிபெயர்ந்தது. சில வருடங்கள் கெக்கிராவையில் வாழ்ந்த பிறகு குடும்பம் அதே மாகாணத்தின் தம்புத்தேகமவுக்கு நகர்ந்தது.

தம்புத்தேகம அநுராதபுரம் நகரில் இருந்து 25 கிலோமீட்டர்கள் தொலைவிலும் தலைநகர் கொழும்பில் இருந்து 190 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்திருக்கும் ஒரு விவசாயப் பிரதேசமாகும். திசாநாயக்க தனது ஆரம்பக்கல்வியை காமினி மகா வித்தியாலயத்திலும் இரண்டாம் நிலைக் கல்வியை தம்புத்தேகம மத்திய கல்லூரியிலும் நிறைவுசெய்தார். அவரே தம்புத்தேகம மத்திய கல்லூரியில் இருந்து பல்கலைக்கழக பிரவேசம் செய்த முதல் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

திசாநாயக்கவின் தந்தையார் ஒரு விவசாயத் தொழிலாளி. பல வருடங்களுக்கு பிறகு அவருக்கு நில அளவையாளர் திணைக்களத்தில் ஒரு அலுவலக உதவியாளராக நிரந்தரமான தொழில் வாய்ப்பு கிடைத்தது. சில சந்தர்ப்பங்களில் நில அளவையாளர்கள் களவேலைக்கு செல்லும்போது தந்தையார் உபகரணங்களை தூக்கிச்செல்லும் வேலையையும் செய்தார். குடும்பப் பெண்மணியான தாயாருக்கு நெல் விதைப்பு மற்றும் அறுவடைக் காலங்களில் ஒழுங்காக வேலை கிடைக்கும்.

தம்புத்தேகமவுக்கு வந்த பிறகு ஆரம்ப வருடங்களில் குடும்பம் பெரும் பணக் கஷ்டத்துக்குள்ளானது. அவர்களது வீட்டுக்கு மின்சார வசதி கிடையாது. இளம் திசாநாயக்க இரவு வேளைகளில் மண்ணெண்ணெய் குப்பி விளக்கின் வெளிச்சத்தில்தான் படிக்கவேண்டியிருந்தது. குடும்ப வருமானத்துக்கு உதவுவதற்காக தாயார் இனிப்புப் பலகாரங்கள் தயாரிப்பார். மகன் அவற்றை எடுத்துச் சென்று அருகாமையில் உள்ள தம்புத்தேகம புகையிரத நிலையத்தில் யாழ்தேவி, உத்தரதேவி மற்றும் ரஜரட்ட போன்ற நீண்டதூர ரயில்களின் பயணிகளுக்கு விற்பனை செய்வார். பாடசாலை விடுமுறை நாட்களில் திசாநாயக்க குழிவெட்டுபவராக பகுதிநேர வேலை செய்தார்.

குடும்பத்துக்கு பொருளாதாரக் கஷ்டம் இருந்த போதிலும், திசாநாயக்க திறமை மிகுந்த ஒரு மாணவனாக பிரகாசித்தார். பாடங்களை புரிந்துகொள்வதில் மிகுந்த ஆற்றலையும் நுட்பநுணுக்கமான விடயங்களை எளிதில் கிரகித்துக் கொள்ளும் திறமையும் கொண்டவராக அவர் இருந்தார். நல்ல நினைவாற்றலும் அவருக்கு இருந்தது. பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்கு தம்புத்தேகம மத்திய கல்லூரியில் இருந்து தெரிவான முதல் மாணவன் என்ற வகையில் அந்த பாடசாலைக்கு அவர் பெருமை சேர்த்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு சில வாரங்கள் முன்னதாக அந்த கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் அவரை கௌரவித்தனர். அந்த நிகழ்வு ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கிடைக்கவிருந்த வெற்றிக்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது.

ஆர்வமிக்க வாசகர்

திசாநாயக்க தனது மாணவ காலத்திலும் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலும் ஒரு ஆர்வமிக்காவாசகர். இப்போதும் தான். சில வருடங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய அவரிடம் விரும்பிய நூல்கள் குறித்து கேட்கப்பட்டது. லியோ டால்ஸ்ராயின் ‘ போரும் சமாதானமும் ‘ , மார்க்சிம் கோர்க்கியின் ‘ தாய் ‘ , மகிந்த பிரசாத் மாசிம்புல எழுதிய ‘செங்கோட்டன் ‘, மோகன் ராஜ் யடவலவின் ‘ ‘ஆதரனீய விக்டோரியா’ ஆகியவை அவர் குறிப்பிட்டவற்றில் சில நூல்கள். பல சிறுகதைகளையும் தான் விருப்பி வாசித்ததாக அவர் கூறினார்.

தனது பாடசாலை நாட்களில் டாக்டர் ஆபிரஹாம் கோவூரின் படைப்புக்களை வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். தென்னிந்திய மாநிலமான கேரளாவில் திருவல்லா என்ற பகுதியைச் சேர்ந்த டாக்டர் கோவூர் இலங்கைக்கு குடிபெயர்ந்து கல்கிசை சென். தோமஸ் கல்லூரியில் பல வருடங்கள் ஆசிரியராக கடமையாற்றினார். பகுத்தறிவாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த்அவர் மூடநம்பிக்கைகள், போலிச் சாமியார்கள் மற்றும் மதங்களின் பெயரால் இடம்பெறும் போலித்தனங்களுக்கும் எதிராக பெருமளவு நூல்களை எழுதினார்.

மாபெரும் சிந்தனையாளர்களினதும் அரசியல் தலைவர்களினதும் சரிதைகளையும் சுயசரிதைகளையும் திசாநாயக்க நன்கு சுவைத்துப் படிப்பார். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், காந்தி, டிட்டோ, காஸட்ரோ மற்றும் கிளின்ரோ ஆகியோரின் சரிதைகள் திசாநாயக்கவின் வாழ்வை வளப்படுத்திய மகத்தான மனிதர்களின் நூல்களில் முக்கியமானவை. அந்த நேர்காணலில் அவர் மேலும் கூறுகையில் ” எனது வாழ்க்கையை பல நூல்கள் மாற்றியமைத்தன.சோவியத் ரஷ்யாவின் இலக்கியங்களினால் குறிப்பாக நாவல்கள் , சிறுகதைகளினால் நான் மிகவும் ஆழமாக ஆகர்சிக்கப்பட்டேன். அந்த காலகட்டத்தின் இலக்கியங்கள் எமது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின” என்று குறிப்பிட்டிருந்தார்.

வாசிப்பின் மீதான திசாநாயக்கவின் காதலையும் நூல்கள் தனது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய அவரின் மதிப்பையும் வைத்துக்கொண்டு அவரை வெறுமனே ஒரு புத்தகப்பூச்சி என்று நினைத்துவிடக் கூடாது. அவருக்குள் இருக்கின்ற ஒரு ‘ மெய்வல்லுனரை ” மக்கள் நேரிலும் தொலைக் காட்சிகளிலும் பார்த்திருப்பார்கள். சுறுசுறுசுறுப்பாக நடந்துவந்து மேடைகளில் அவர் ஏறுகின்ற பாங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. அவரது இந்த உடல்தகுதியின் தோற்றுவாய் அநுராதபுரத்தின் தண்ணீரில் தங்கியிருக்கிறது.

நல்ல நீச்சல்வீரர்

திசாநாயக்க வேகமும் உரமும் கொண்ட நல்ல நீச்சல் வீரர். தனது மாணவ காலத்தில் அவர் அநுராதபுரத்தில் உள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த திஸ்ஸவேவ, அபயவேவ, நுவரவேவ ஆகிய மூன்று வாவிகளில் நீந்துவார். முதலாவது நூற்றாண்டில் வலகம்பா மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட நுவரவேவவின் முழுமையான மூன்று கிலோ மீட்டர்கள் நீளத்தையும் திசாநாயக்க அடிக்கடி நீந்தி முடிப்பார்.

அரசியல் செயற்பாட்டாளராக மாறிய பிறகு திசாநாயக்க இலங்கை பூராவும் பயணம் செய்தார்.எங்கெல்லாம் குளங்கள், வாவிகள் மற்றும் ஆறுகள் இருக்கின்றனவோ அங்கு சாத்தியமான வேளைகளில் அவர் நீச்சலில் இறங்குவதற்கு தவறுவதில்லை.” நான் நீச்சலை மிகவும் விரும்புபவன். சராசரியாக சுமார் இரு கிலோமீட்டர்கள் நீந்துவேன். அதனால் எனக்கு ஒரு நீச்சல் தடாகம் போதாது. உண்மையைச் சொல்கிறேன், எனக்கு நீச்சல் தடாகங்களைப் பிடிப்பதில்லை” என்று அவர் ஒரு தடவை நேர்காணலில் கூறினார்.

நீச்சலும் வாசிப்பும் படிப்பும் நிறைந்த அமைதியான கிராமப்புற வாழ்க்கையில் இருந்து திசாநாயக்க தனது பதினகவைகளினா இறுதி வருடத்தில் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். 1987 ஆம் ஆண்டு போரையும் சமாதானத்தையும் கொண்டதாக இருந்தது. அதுவே திசாநாயக்கவின் வாழ்வை முற்றுமுழுதாக மாற்றியமைத்த ஆண்டாகவும் அமைந்தது. அதற்கு பிறகு நடந்தவற்றை விளங்கிக்கொள்வதற்கு வரலாற்றை ஒரு தடவை திரும்பிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கை

இலங்கையின் இனநெருக்கடி பல வருடங்கள் நீடித்த கொடூரமான ஒரு ஆயுதமோதலாக மாறியது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன ஜே.ஆர். ஜெயவர்தனவும் கொழும்பில் 1987 ஜூலை 29 ஆம் திகதி இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். போர்நிறுத்தம் ஒன்று பிரகடனம் செய்யப்பட்டது. அமைதியைப் பேணுவதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்திய இராணுவம் இந்திய அமைதிகாக்கும் படை என்ற பெயரில் நிலைகொண்டது.

இலங்கை ஆயுதப்படைகளுக்கும் ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதன் மூலம் சமாதானத்தை ஏற்படுத்தும் மெச்சத்தக்க குறிக்கோளுடனேயே ராஜீவ் — ஜெயவர்தன உடன்படிக்கை கைச்சாத்திடப்ப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று நிலைத்து நிற்கக்கூடிய ஒரு சமாதானத்தை கொண்டுவருவதற்கு பதிலாக, இந்திய — இலங்கை உடன்படிக்கை மேலும் வன்முறைக்கும் இரத்தக்களரிக்கும் வழிவகுத்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்து மீண்டும் போரைத் தொடங்கியது. விரைவாகவே வடக்கிலும் கிழக்கிலும் இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு எதிராக விடுதலை புலிகள் முழு அளவிலான கெரில்லப்போரை தொடுத்தனர்.

றோஹண விஜேவீர

அதேவேளை றோஹண விஜேவீர தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுனயும் (ஜே.வி.பி. ) இந்திய — இலங்கை உடன்படிக்கையை எதிர்த்து தென்னிலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது.பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவியில் இருந்தபோது 1971 ஆம் ஆண்டில் ஜே.வி.பி. ஆயுதக்கிளர்ச்சி ஒன்றை தொடங்கியது.பல நாடுகளின் உதவியுடன் அந்த கிளர்ச்சியை அரசாங்கம் ஈவிரக்கமற்ற முறையில் கொடூரமாக நசுக்கியது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்களன சிறையில் அடைக்கப்பட்டனர். இது முதலாவது ஜே.வி.பி. கிளர்ச்சி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.

1977 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஜே.வி.பி. மீதான தடையை நீக்கி விஜேவீர உட்பட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த இயக்கத்தின் உறுப்பினர்களை விடுதலை செய்தது. ஜே.வி.பி. மீண்டும் அரசியல் நீரோட்டத்தில் பிரவேசித்தது.விஜேவீர 1982 அக்டோபர் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டு மூன்றாவதாக வந்தார்.( ஐக்கிய தேசிய கட்சி முதலாவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாவதாகவும் வந்தன ) இலங்கை அரசியலில் ஒரு மூன்றாவது சக்தியாக ” புதிய இடது ” ஜே.வி.பி.” மேலெழுந்தது போன்று தோன்றியது.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பல அமைச்சர்களின் அந்தரங்க ஆதரவுடன் 1983 ஜூலையில் நாடுபூராவும் தமிழர்களுக்கு எதிராக இனவன்செயல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அந்த வன்செயல்களுக்கு ஜே.வி.பி.பொறுப்பென்று தவறாகக் குற்றஞ்சாட்டி ஜனாதிபதி ஜெயவர்தன அந்த கட்சியை தடைசெய்தது. ஜே.வி.பி. தலைமறைவு இயக்கமாக செயற்படத் தொடங்கியது.விஜேவீர உட்பட தலைவர்களும் தலைமறைவாகினர்.

ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி

ஆனால், இந்திய — இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு வடக்கிலும் கிழக்கிலும் இந்திய அமைதிகாக்கும் படை நிலை கொண்டபோது ஜே.வி.பி. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டது. கடந்த காலத்தில் இந்திய மன்னர்கள் இலங்கை மீது நடத்திய பல்வேறு படையெடுப்புகள் பற்றிய பழைய அச்சங்களை மீண்டும் கிளறிய ஜே.வி.பி. சிங்கள பெரும்பான்மை மாகாணங்களில் இந்திய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை தொடங்கியது. அது ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி என்று அழைக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டில் ஜே.வி.பி. இரண்டாவது கிளர்ச்சியை தொடங்கியபோது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகப் பெரும்ப்னமையா வாழும் பிரதேசங்களில் அந்த இயக்கத்துக்கு உறுப்பினர்கள் இருக்கவில்லை. அதனால் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஏழு மகாணங்களிலிலேயே அதன் ஆயுதப்போராட்ட நடவடிக்கைகள இடம்பெற்றன.

ஜே.வி.பி.யின் இந்திய எதிர்ப்பு இராணுவப் பிரிவுக்கு தேசபக்த மக்கள் இயக்கம் ( தேசப்பிரேமி ஜனதா வியாபாரய ) என்று பெயரிடப்பட்டது. மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கே தேசபக்திக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. தேசபக்த மக்கள் இயக்கத்தின் தளபதிக்கு கீர்த்தி விஜேபாகு என்று இயக்கப்பெயர் கொடுக்கப்பட்டு வரலாற்று சம்பவங்கள் நினைவு மீட்டப்பட்டன.

பத்தாவது நூற்றாண்டில் மன்னர்களான இராஜராஜ சோழனுக்கும் இராஜேந்திர சோழனுக்கும் எதிராக இளவரசர் கீர்த்தியே போராடினார். ருஹுணு இளவரசரான அவர் இறுதியில் பொலன்னறுவையில் இருந்து சோழ படையெடுப்பாளர்களை விரட்டி தன்னை விஜேபாகு மன்னன் என்று முடாசூடிக் கொண்டார். தேசபக்த மக்கள் இயக்கத்தின் தளபதி கீர்த்தி விஜேபாகுவின் உண்மையான பெயர் சமான் பியசிறி பெர்னாண்டோ. மொரட்டுவையில் லுணாவ பகுதியைச் சேர்ந்த அவர் களனி பல்கலைக்கழக பட்டதாரி.

ஜே.வி.பி.யில் இணைவு

இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் தான் 19 வயதான அநுரா குமார திசாநாயக்க 1987 ஆம் ஆண்டில் தனது ஒன்றுவிட்ட சகோதரன் சுனில் இரத்நாயக்கவுடன் சேர்ந்து ஜே.வி.பி.யில் இணைந்துகொண்டார். திசாநாயக்க ‘ சுனில் ஐயா ‘ என்று அழைத்த அந்த சகோதரன் அவரின் வாழ்க்கையில் பெரும் செல்வாக்கைச் செலுத்தினார். தாய்நாட்டுக்காக தாங்கள் ஜே.வி.பி.யில் இணையவேண்டும் என்று திசாநாயக்கவை நம்பவைத்தவரே அந்த சுனில்தான்.

அரவிந்த என்ற அநுரா

அநுரா குமார திசாநாயக்க ஜே.வி.பி.யில் இதைந்தபோது அவர் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருந்தார். சில மாதங்களுக்கு பிறகு திசாநாயக்கவுக்கு பேராதனை பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்தது. அவர் கண்டிக்கு சென்று தனது மூன்றாம் நிலைக் கல்வியை ஆரம்பித்தார். ஆனால் அவர் தனது கூடுதலான நேரத்தை தலைமறைவு அரசியல் நடவடிக்கைகளிலேயே செலவிட்டார்.” அரவிந்த ‘ என்ற இயக்கப் பெயருடன் ஜே.வி.பி./ தேசப்பிரேமி ஜனதா வியாபாரயவுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். ஜே.வி.பி.யின் பல்வேறு அமைப்புக்களிடையே தகவல்களைக் கொண்டுசெல்லும் பணிகளை தூதருக்குரிய பணிகளை அவர் செய்தார்.

ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலம் நீடித்தது. அதில் ஜே.வி.பி.யினாலும் பொலிசார், பரா இராணுவம் மற்றும் படைகள் மேற்கொண்ட கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளினாலும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அரசின் முகவர்களினால் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு படைகளினாலும் அரசின் ஏனைய முகவர்களினாலும் கொல்லப்மட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் நம்பகமான மதிப்பீடுகள் கிடைக்கவில்லை எனினும் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் உத்தியோகபூர்வ விபரங்கள் இருக்கின்றன.

அந்த மூன்று வருட காலப்பகுதியில் 487 அரசாங்க சேவையாளர்கள், 342 பொலிஸ்காரர்கள், 209 பாதுகாப்பு படையினர், 16 அரசியல் தலைவர்கள் 4,945 குடிமக்கள் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தொகையில் 30 பௌத்த பிக்குகள்,இரு கத்தோலிக்க மதகுருமார், 52 பாடசாலை அதிபர்கள், நான்கு மருத்துவர்கள், 18 பெருந்தோட்ட அத்தியட்சகர்கள் மற்றும் 27 தொழிற் சங்கவாதிகளும் அடங்குவர். அதில் 93 பொலிஸ்காரர்கள் மற்றும் 69 படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் கூட அடங்குவர்.

அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை

ஜே.வி.பி.யினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாதத்துக்கு இணையாக அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளும் அமைந்தன. அரச பயங்கரத்தினால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களில் திசாநாயக்கவின் ஒன்றுவிட்ட சகோதரன் சுனில் அடங்குவார். சுனில் ஐயா கைதாகி சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்தார். அரவிந்த என்ற திசாநாயக்க பேராதனையை விட்டு தப்பியோடி தலைமறைவானார். அவர் தேடப்படும் ஒருவராக இருந்தார். அரசியலில் ஈடுபாடு இல்லாத அவரின் குடும்பம் தங்களது மண்வீட்டில் இருந்து ஒரு எளிமையான கல்வீட்டுக்கு குடிபெயர்ந்தது. அரவிந்தவுக்கு ஒரு எச்சரிக்கையாக அரசின் முகவர்கள் அந்த வீட்டுக்கு தீவைத்துக் கொளுத்தியதாக கூறப்பட்டது.

திசாநாயக்க மேராதனையில் கல்வியை இடையில் நிறுத்தி தலைமுறைவு வாழ்க்கைக்கு சென்றார். பெரிதாக வெளியில் தலைகாட்டாமல் அவர் இடத்துக்கு இடம் சென்று வந்ததாக ஜே.வி.பி. வட்டாரங்களில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது. அந்தக் காலப்பகுதியே அவரது வாழ்க்கையில் மிகவும் ஆபத்தான கட்டமாக இருந்தது. றோஹண விஜேவீர, உபதிஸ்ஸ கமநாயக்க உட்பட பெரும்பாலான சிரேஷ்ட ஜே.வி.பி. தலைவர்கள் பிடிக்கப்பட்டு கொலை செய்ப்பட்டனர். சிரேஷ்ட தலைவர்களில் சோமவன்ச அமரசிங்க மாத்திரமே உயிர்தப்பி இந்திய உதவியுடன் ஐரோப்பாவுக்கு தப்பிச்சென்றார். ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி முற்றுமுழுதாக நசுக்கப்பட்டது

களனி பல்கலைக்கழகம்

நிலைவரம் தணியத் தொடங்கியது. எந்தவிதமான தொடர்புமின்றி ஒரு வருடத்துக்கும் கூடுதலான காலமாக தலைமறைவாக இருந்த பிறகு திசாநாயக்க வெளியில் வந்து சமூகத்தில் மீண்டும் இணைந்துகொண்டார். ‘ அரவிந்தவின் ‘ அத்தியாயம் அத்துடன் முடிவுக்கு வந்தது. திசாநாயக்க தனது கல்வியை மீண்டும் ஆரம்பித்தார். இந்த தடவை களனி பல்கலைக்கழகத்துக்கு மாற்றம் பெற்று அங்கு கல்வியை தொடர்ந்தார்.

தலைவிதி

ஜே.வி.பி.க்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான நடவடிக்கைகளில் இருந்து தப்பிய திசாநாயக்கவுக்கு எதிர்காலத்தில் பெரிய ஒரு பாத்திரத்தை வகிப்பதற்கு விதி எழுதப்பட்டிருந்தது போன்று தோன்றியது. இதிகாசத்தில் வரும் பீனிக்ஸ் பறவையைப் போன்று சாம்பலில் இருந்து ஜே.வி.பி. வெளிக்கிளம்பியது. திசாநாயக்க படிப்படியாக உயர்ந்து ஜே.வி.பி.யினதும் அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினதும் தலைவராக வந்தார். தற்போது அவர் இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி. இடதுசாரித்தாரகை இலங்கை மேலாக எழுந்திருக்கிறது. இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை இரண்டாவது பாகத்தில் பார்ப்போம்.



 அநுர குமார திசாநாயக்க ; இலங்கை வானில் ‘ இடதுசாரி ‘ நட்சத்திரம் -2

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் பரபரப்பான நிகழ்வுகள் பலப்பல நிறைந்த ஆரம்ப வாழ்க்கையைப் பற்றி இந்த கட்டுரைத் தொடரின் முதல் பாகத்தில் கடந்தவாரம் எழுதியிருந்தேன். இந்த இரண்டாவது பாகத்தில் ஜனதா விமுக்தி பெரமுனவுக்குள் (ஜே.வி.பி.) ஒரு அரசியல் தலைவராக அவரின் படிப்படியான சீரான வளர்ச்சி குறித்து பாராப்போம்.

கடந்த வாரத்தைய பத்தியில் குறறிப்பிட்டதைப் போன்று ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி ரணசிங்க பிரேமதாச அரசாங்கத்தினால் ஈவிரக்கமற்ற முறையில் நசுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமற்போகச் செய்யப்பட்டார்கள். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் பாதுகாப்புக்காக நாட்டை விட்டு தப்பியோடினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கைதாகி கொலை செய்யப்படக்கூடிய ஆபத்தில் இருந்து தப்பிய அதேவேளை தங்களது அடையாளங்களை மாற்றி வேவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தார்கள். இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருந்து கைதுசெய்யப்படுவதில் இருந்து தப்பி தலைமுறைவு வாழ்க்கைக்கு சென்றவர்களில் அநுராவும் ஒருவர்.

ஜே.வி.பி.யின் தாபகத் தலைவர் விஜேவீர, இரண்டாவது தலைவர் சமான் பியசிறி பெர்னாண்டோ, மூன்றாவது தலைவர் லலித் விஜேரத்ன ஆகியோர் 1989 — 90 காலப்பகுதியில் அரசினால் கொலை செய்யப்பட்ட ஜே.வி.பி.யின் 14 உயர்மட்டத் தலைவர்களில் அடங்குவர். சிறி ஐயா என்ற சோமவன்ச அமரசிங்க மாத்திரமே உயிர்தப்பி வாழ்ந்த ஒரேயொரு உயர்மட்டத் தலைவரும் அரசியல் குழு வின் உறுப்பினருமாவார். அவர் பிறகு ஜே.வி.பி.யின் நான்காவது தலைவராக வந்தார். 1990 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு தப்பியோடிய சோமவன்ச அங்கிருந்து தாய்லாந்துக்கு சென்றார். அந்த நாட்டில் இருந்து இத்தாலிக்கு மாறிய அவர் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரினார்.

சோமவன்ச அமரசிங்க

பல்வேறு ஐரோப்பிய நாடுகளிடையே மாறிமாறி பயணம் செய்த சோமவன்ச அமரசிங்க புலம்பெயர் சிங்கள சமூகத்தவர்கள் மத்தியில் ஜே.வி.பி.யின் கிளைகளை அமைத்தார். அங்கிருந்து அவர் இலங்கையில் இயங்காமல் இருந்த உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு அனேகமாக அழிந்துபோயிருந்த ஜே.வி.பிக்கு புத்துயிர் கொடுக்கும் ஔிவுமறைவான செயற்பாடுகளை தொடங்கினார். அவர் பிரான்ஸில் இருந்தும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்தும் இங்குள்ள நடவடிக்இரகசிய உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார். அதேவேளை, பாதுகாப்பு நிலைவரமும் தளரத் தொடக்கியது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த உறுப்பினர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் ஜே.வி.பி. மீதான தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருந்தது.

1993 மே மாதம் பிரேமதாசவின் மரணத்துக்கு பிறகு ஜே.வி.பி.யை பொறுத்தவரை வசதியாக அமையக் கூடியதாக அரசியல் காலநிலை மாறியது. 1994 ஆம் ஆண்டில் சோமவன்ச அமரசிங்க இலங்கை திரும்பி அமைதியான முறையில் ஜே.வி.பி.யை மீள ஒழுங்கமைக்கத் தொடங்கினார். பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஜே.வி.பி. தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட இயக்கமாகவே இருந்தது.
அதனால் சோமவன்ச ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்தார். அந்த அமைப்பு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் போட்டியிட்டு 15, 309 வாக்குகளைப் பெற்றது. ஜனித் விபுலகுண பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார். ஆனால், அவர் உடனடியாகவே பதவியில் இருந்து விலகவே நிஹால் கலப்பதி அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினராக வந்தார்.

1994 ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஆதரவாக வேலை செய்தது. அவர் ஜனாதிபதியாக வந்ததும் ஜே.வி.பி. மீதான தடையை நீக்கினார். அதையடுத்து ஜே.விபி. அரசியல் செயற்பாடுகளை மீண்டும் பகிரங்கமாக முன்னெடுக்கத் தொடங்கியது. சோமவன்ச அமரசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் ஜே.வி.பி. 1995 ஆம் ஆண்டில் அதன் தேசிய மகாநாட்டை தங்காலையில் நடத்தியது.

களனி பல்கலைக்கழகம்

அதேவேளை, அநுரா தனது மூன்றாம் நிலைக்கல்வியை மீண்டும் தொடங்கினார். 1992 ஆம் ஆண்டில் களனி பல்கலைக்கழகத்தில் மாணவனாக இணைந்த அவர் தனது பல்கைலைக்கழக நாட்களில் மிகவும் அமைவடக்கமாக இருந்தார் என்றபோதிலும், மாணவர்கள் சங்க நடவடிக்கைகளில் பங்கேற்றார். ரியூட்ரிகளில் கற்பிப்பதிலும் அவர் ஈடுபட்டார்.

சோமவன்சவுடனும் தொடர்பில் இருந்த அநுரா அவரிடமிருந்து அந்தரங்க தகவல்களை ஏனைய ஜே.வி.பி. உறுப்பினர்களுக்கு தெரிவித்துவந்தார். தனது கல்வியை நிறைவு செய்துகொண்ட அநுரா 1995 ஆம் ஆண்டில் மௌதீக விஞ்ஞானத்தில் பட்டத்தைப் பெற்றார். முழு நேர வேலைவாய்ப்பு ஒன்றைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அவர் முழுநேர அரசியலுக்கு திரும்பினார்.

முன்னர் கூறியதைப் போன்று சோமவன்ச இலங்கைக்கு திரும்பி ஜே.வி.பி.க்கு புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அநுராவை விரும்பிய சோமவன்ச அவரின் விவேகம், ஆற்றல் மற்றும் கொள்கை உறுதிப்பாட்டினால் பெரும் கவரப்பட்டார். அநுராவை அவர் தனது அரவணைப்பில் எடுத்துக்கொண்டார்.

அநுராவின் துரித எழுச்சி

தங்காலை தேசிய மகாநாட்டுக்கு பிறகு ஜே.வி.பி.யின் ஆதரவுடனான சோசலிச மாணவர்கள் சங்கம் மீள ஒழுஙகமைக்கப்பட்டது. அதன் தேசிய அயைப்பாளராக அநுரா நியமிக்கப்பட்டார். அதன் பிறகு ஜே.வி.பி.யின் படிநிலைகளுக்குள் அவர் துரிதமாக உயர்வடைந்தார். 1996 ஆம் ஆண்டில் ஜே.வி.பி.யின் மத்திய குழுவின் உறுப்பினராக வந்த அவர் இரு வருடங்களில் 1998 ஆம் ஆண்டில் சகல வல்லமையும் பொருந்திய ஜே.வி.பி. அரசியற்குழுவுக்கு நியமிக்கப்பட்டார்.

ஜே.வி.பி.யின் மூன்றாவது கட்டம்

1971 ஆம் ஆண்டில் ஜே.வி.பி. முன்னெடுத்த ஆயுதக் கிளர்ச்சி ஒரு சோசலிசப் புரட்சியை நோக்கமாகக் கொண்டது.1987 — 90 காப்பகுதியில் அதன் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி ” இந்திய ஆக்கிரமிப்புக்கு ” எதிரான தேசபக்த எதிர்ப்பை நோக்கமாகக் கொண்டது. அதற்கு பிறகு இப்போது அதன் மூனாறாவது கட்டம். அந்த கட்டத்தில் ஜே.வி.பி. காயப்பட்டு உருக்குலைந்த ஒரு அமைப்பாக இருந்தது.

அரசினால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து மக்கள் கவலையுடன் மக்கள் கிலி கொண்டிருந்த போதிலும் கூட, ஜே.வி.பி. செய்த அட்டூழியங்கள் பற்றியும் அச்சமடைந்தவர்களாகவே இருந்தனர். ஜே.வி.பி.யின் பயங்கரம் தலைவிரித்தாடிய காலம் மக்கள் மனதைவிட்டு அகலாமல் அப்படியே இருந்தது. அதனால் ஜே.வி.பி. அதன் மீள் எழுச்சியை முன்னெடு்பதற்கு புதிய ஒரு அரங்கு தேவைப்பட்டது.

இலங்கைப்படைகள் தமிழீழ விடுதலை புலிகளுடன் போரில் ஈடுபட்டிருந்தன. சோமவன்ச தலைமையிலான ஜே.வி.பி. இலங்கைத் தேசியவாதம் மற்றும் நாட்டுப்பிரிவினைக்கு எதிர்ப்பு என்ற போர்வையில் ஒரு சிங்கள பேரினவாதப் போக்கை கடைப்பிடித்தது. போரை ஆதரித்த ஜே.வி.பி. அதற்கு பல்வேறு வழிகளிலும் உதவியாகச் செயற்பட்டது. ஆயுதப்படைகளுக்கு ஆட்திரட்டல்களைச் செய்வதற்கான பிரசாரங்களை அது தீவிரமாக முன்னெடுத்தது. படைவீரர்களுக்கு மனத்தைரியத்தை ஊக்குவிப்பதற்காக போரின் முன்னரங்கப் பகுதிகளுக்கு ஜே.வி.பி. யின் தலைவர்கள் விஜயம் செய்தார்கள்.

தேர்தல்களில் போட்டி

எதிர்மறையான அரச எதிர்ப்பு படிமத்தில் இருந்து ஒரு நேர்மறையான அரச ஆதரவு படிமத்துக்கு தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரு முயற்சியில் ஜே.வி.பி. ஒரு புத்தமைவாக்கத்துக்கு உள்ளாகிக் கொண்டிருந்த வேளையில் அது கிரமமாக தேர்தல்களில் போட்டியிடத் தொடங்கியது. இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கைக்கும் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்துக்கும் எதிரானதாக இருந்தபோதிலும், ஜே.வி.பி. மாகாணசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்கு எதிரானதாக இருக்கவில்லை. மாநகர சபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தல்களிலும் அது போடாடியிட்டது. தேர்தல்களில் போட்டியிட்டதன் மூலம் ஜே.வி.பி. அதன் ஆதரவுத்தளத்தை விரிவாக்கிக் கொண்டது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களாக வந்ததன் மூலம் ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர்கள் ஒரு அங்கீகாரத்தைப் பெறக்கூடியதாக இருந்தது.

பாராளுமன்ற தேர்தல்கள்

அதற்கு பிறகு அவர்கள் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடுவதில் நாட்டம் காட்டினார்கள். 2000 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஜே.வி.பி. 518, 774 வாக்குகளைப் பெற்றது. இரு நியமன உறுப்பினர்கள் உட்பட பத்து உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர். 2001 பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி. க்கு 815, 353 வாக்குகள் கிடைத்தன. பாராளுமன்றத்துக்கு சென்ற 16 உறுப்பினர்களில் 13 பேர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். மூவர் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டவர்கள்.

ஏற்கெனவே கூறப்பட்டதைப் போன்று அநுரா இப்போது ஜே.வி.பி.யின் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பினர். சோசலிச மாணவர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளரான அவர் கட்சியின் மத்திய குழு மற்றும் அரசியற்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். மாணவர்கள் சங்கத்தின் அமைப்பாளர் என்ற வகையில் அவர் மிகுந்த செல்வாக்குடையவராக விளங்கினார். ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதில் ஜே.வி.பி.யின் முக்கியமான ஆதரவுச் சக்தியாக மாணவர்கள் விளங்கினர். அநுராவின் வழிகாடடலில் ஜே.வி.பி. ஆதரவு மாணவர்கள் சங்கம் கணிசமானளவுக்கு விரிவடைந்து பெரும்பாலான பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் தன்னை நிறுவிக் கொண்டது.

எனவே ஜே.வி.பி. தேர்தல்களில் போட்டியிட்டபோது அநுரா வுக்கு தேசியப்பட்டியலில் இடம் வழங்கப்பட்டது. ஒரு மாவட்த்துக்கான வேட்பாளராக மட்டுப்பட்டு நிற்காமல் நாட்டின் சகல பாகங்களிலும் அவர் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு வசதியாகவே அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது.மிகுந்த ஆற்றல்மிக்க ஒரு பேச்சாளராக வெளிக்கிளம்பிய அநுரா கற்பனாவாத வெற்று ஆரவார உரைகளை நிகழ்த்தியவர் அல்ல. கூறவேண்டிய விடயத்தை நேரடியாகவே கூறி நியாயத்தை மக்களுக்கு விளங்கவைப்பதில் மிகுந்த ஆற்றலை அவர் வெளிப்படுத்தினார். சில சந்தர்ப்பங்களில் அவர் உணர்ச்சிமயப்பட்டவராகவும் பேசுவார்.

தேசிய பட்டியல் எம்.பி.

2000 ஆம் ஆண்டில் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்ட அநுரா முதற்தடவையாக பாராளுமன்ற பிரவேசம் செய்தார். இரண்டாவது தடவையும் அவர் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மிகவும் விரைவாகவே அவர் தன்னை பாராளுமன்றத்தில் ஆளுமைத்திறன் கொண்ட பேச்சாளராகவும் ஆற்றல் மிகு விவாதியாகவும் நிரூபித்தார்.

2001 ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தமோதிலும், அவரது கட்சியான பொதுஜன முன்னணி பாராளுமன்ற தேர்தலில் இரண்டாவதாகவே வந்தது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 4,086,026 வாக்குகளைப் பெற்று 109 ஆசனங்களைக் கைப்பற்றியது. சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொதுஜன முன்னணி 3,330, 815 வாக்குகளுடன் 77 ஆசனங்களைப் பெற்றது. ஜே.வி.பி. 815, 353 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களை தனவசமாக்கியது. பொதுஜன முன்னணியினதும் ஜே.வி.பி.யினதும் வாக்குகளை ஒன்றாகச் சேர்த்தால் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி இரண்டாவது இடத்துக்கே தளளப்பட்டிருக்கும் என்பது வெளிப்படையானது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஜே.வி.பி.

இந்த கணிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 2004 பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி.யுடன் கூட்டணி ஒன்றை அமைத்தார்.கொழும்பில் இருந்த வெளிநாட்டு தூதுவர் ஒருவரும் இந்த கூட்டணி உருவாவதற்கு அனுசரணையாகச் செயற்பட்டார். அதையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு அங்கமாக ஜே.வி.பி. 2004 பொதுத்தேர்தலில் போட்டியிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4,223, 970 வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் 105 ஆசனங்களைக் கைப்பற்றியது. 3, 504, 200 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி 82 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டது.

2004 பொதுத்தேர்தலில் ஜே.வி.பி. பாராட்டத்தக்க ஒரு வெற்றியைப் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் பட்டியல்களின் அங்கமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜே.வி.பி.யின் மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தங்களது வேட்பாளர்களுக்கு உச்சபட்ச எண்ணிக்கையில் விருப்பு வாக்குகள் கிடைப்பதற்கு ஜே.வி.பி.யினர் கடுமையாகப் பாடுபட்டனர். அதன் விளைவாக அந்த கட்சிக்கு பாராளுமன்றத்தில் 39 ஆசனங்கள் கிடைத்தன.

அமைச்சராக அநுர

அநுரா குமார திசாநாயக்கவுக்கு 2004 ஆம் ஆண்டு ஒரு மைல்கல்லாக அமைந்தது.2004 ஏப்ரில் தேர்தல் அவரது தேர்தல் ஞானஸ்நானமாக விளங்கியது. குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் பட்டியலில் போட்டியிட்ட அவர் 153, 868 விருப்பு வாக்குகள் பெற்றுத் தெரிவானார். ஜனாதிபதி திருமதி குமாரதுங்க அமைச்சரவையை அமைத்தபோது ஜே.வி.பி.க்கு நான்கு அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்டன. அநுரா விவசாய, கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

காலநடை வளர்ப்பும் விவசாயமும் அநுராவின் இதயத்துக்கு நெருக்கமான துறைகள் என்பதால் அந்த அமைச்சைப் பெற்றதில் அவர் பெரும் மகிழ்ச்சியடைந்தார். மிகவும் திறமையாக தனது கடமைகளைச் செய்த அவர் நாட்டின் விவசாயத்துறைக்கும் கால்நடை வளர்ப்பு துறைக்கும் புத்துயிர் அளிக்கப் பாடுபட்டார். ஆனால், நிகழ்வுப் போக்குகள் துரதிர்ஷ்டவசமாக வேறுபட்ட ஒரு திருப்பத்தை எடுத்தன. அநுராவின் அமைச்சர் பொறுப்புக் கடமைகள் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தன. அவரும் ஏனைய ஜே.வி.பி. சகாக்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர்முன்னணி அரசாங்கத்தில் வகித்த பதவிகளைத் துறந்தனர். ஜே.வி.பி.யின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும அரசாங்கத்தில் இருந்து வெளியேறினர்.

2004 சுனாமி

நடந்தது இதுதான். 2004 டிசம்பரில் சுனாமி இயற்கை அனர்த்தத்தின் வடிவில் நாடு பயங்கரமான பேரிடரை அனுபவித்தது. பெருமளவில் மரணங்கள், அழிவுகள், இடம்பெயர்வுகள் இடம்பெற்றன. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிராந்தியங்களின் பரந்தளவு கரையோரப் பகுதிகளும் சுனாமியால் பாதிக்கப்பட்டன. அதேபோன்று வடக்கு, கிழக்கின் வேறு கரையோரப்பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகின. சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களினதும் பகுதிகளினதும் புனர்வாழ்வுக்கும் புனரமைப்புக்கும் 300 கோடி அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதற்கு சர்வதேச உதவி வழங்குநர்கள் தயாராயிருந்தனர். பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் பிராந்தியங்களுக்கும் உதவுவதற்கு பணம் ஒப்புரவான முறையில் செலவிடப்படவேண்டும் என்பது கடுமையான ஒரு நிபந்தனையாக முன்வைக்கப்பட்டது.

ஜனாதிபதி திருமதி குமாரதுங்க நோர்வேயின் அனுசரணை ஊடாக விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார். வழமைக்கு மாறான விடுதலை புலிகளுடன் கூட்டுக் கட்டமைப்பு ஒன்று அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது. சுனாமிக்கு பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவ கட்டமைப்பு [Post — Tsunami Operational Management Structure (P — TOMS) ] என்று அது அழைக்கப்பட்டது. வெளிநாட்டு உதவியின் ஊடாக பெறப்படும் நிதி விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் பகுதிகளுக்கும் ஒப்புரவான முறையில் விநியோகிக்கப்படுவதற்கு வசதியாகவே அந்த கட்டமைப்பு நிறுவப்பட்டது. அது அரசாங்கத்தினதும் விடுதலை புலிகளினதும் ஒரு கூட்டுப் பொறிமுறையாகும்.

ஜே.வி.பி. எதிர்ப்பு

ஆனால், சோமவன்ச அமரசிங்க தலைமையிலான ஜே.வி.பி. அந்த சுனாமி உதவிக் கட்டமைப்பை கடுமையாக எதிர்த்தது. ஜே.வி.பி. அதன் சொந்த கடந்த காலத்தை மறந்து விடுதலை புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று வர்ணித்ததுடன் அந்த கட்டமைப்பு அந்த இயக்கத்தை அரசாங்கத்துக்கு நிகரானதாக நோக்குவதாக கண்டனம் செய்தது. முன்னதாக விடுதலை புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான போர் நிறுத்தத்தையும் ஒஸ்லோ அனுசரணையுடனான பேச்சுவார்த்தைகளையும்ஜே.வி.பி. எதிர்த்தது. அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2002 ஆம் ஆண்டில் சமாதான முயற்சிகளை முன்னெடுத்தபோது விடுதலை புலிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக ஜே வி.பி. பெரிய ஆர்ப்பாட்ட இயக்கங்களை ஏற்பாடு செய்தது.

சுனாமி உதவிக் கட்டமைப்பு நடைமுறைக்கு வந்தபோது திருமதி குமாரதுங்க அரசாங்கம் அதைக் கைவிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஜே.வி.பி. 2005 ஜூன் 15 ஆம் திகதியை காலக் கெடுவாகவும் விதித்தது. அதற்கு ஜனாதிபதி திருமதி குமாரதுங்க மறுத்தபோது 2005 ஜூன் 16 ஜே.வி.பி. அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது. அநுரா குமார திசாநாயக்க உட்பட நான்கு அமைச்சர்களும் தங்களது பதவிகளில் இருந்து விலகினர். ” எமது பணிகளை பூர்த்திசெய்ய முடியாத நிலையில் ஆழ்ந்த கவலையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறுவதை நாம் அறிவிக்கிறோம் ” என்று செய்தியாளர்கள் மகாநாட்டில் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறினார்.

அடிப்படை உரிமை மீறல் மனு

அதற்கு பிறகு ஜே.வி.பி.யின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சுனாமி உதவிக் கட்டமைப்பு உடன்படிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை தாக்கல் செய்தனர். அந்த கட்டமைப்புக்கு எதிராக இடைக்காலத்தடை ஒன்று விதிக்கப்பட வேண்டும் என்ற தங்களது கோரிக்கைக்கு அநுரா குமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் மனுவில் ஐந்து காரணங்களைக் குறிப்பிட்டிருந்தனர்.

மனுவை விசாரணை செய்த அன்றைய பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு சுனாமி உதவிக் கட்டமைப்பு உடன்படிக்கையின் முக்கியமான செயற்பாட்டுப் பிரிவுகளுக்கு எதிராக இடைக்காலத்தடை உத்தரவைப் பிறப்பித்தது.2005 நவம்பரில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததால் சுனாமி உதவிக் கட்டமைப்பு செயற்பட முடியாமல் போய்விட்டது.

உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத்தடை உத்தரவை வரவேற்ற ஜே.வி.பி.யினர் கூட்டுக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதை தாங்களே தடுத்து நிறுத்தியதாக கூறினர். ஜே.வி.பி.யின் அன்றைய பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச ” பஸ்ஸுக்கு சக்கரங்கள் இல்லை ” என்று கூறி அவலத்தில் மகிழ்ச்சி கண்டார்.

மகிந்தவுக்கு ஆதரவு

அதையடுத்து ஜே.வி.பி. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தது. ஆனால், மகிந்த ராஜபக்சவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்ட ஜே.வி.பி. 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் அவரை ஆதரித்தது. அவர் வெற்றி பெறுவதற்கு ஜே.வி.பி. பெரிதும் உதவியது. 19 வருடங்கள் கழித்து இப்போது ஜே.வி.பி. தானாகவே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது.

குறுகிய ஒரு காலப்பகுதியில் (2004 –05) அமைச்சரவை அமைச்சராக இருந்த அநுரா குமார திசாநாயக்க இப்போது இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி. ஜே.வி.பி.க்குள்ளும் பரந்தளவில் நாட்டிற்குள்ளும் அநுராவின் அரசியல் உயர்வை பற்றிய கதையை இந்த கட்டுரையின் மூன்றாவது பாகத்தில் பார்ப்போம்.

ஆங்கில மூலம்: டி. பி. எஸ். ஜெயராஜ் (Daily Mirror), தமிழில்: வீரகத்தி தனபாலசிங்கம், நன்றி: வீரகேசரி

No comments:

Post a Comment

India's moment is hurt by interference label

  India's moment is hurt by interference label By  Una Galani  October 15, 2024 MUMBAI, Oct 15 (Reuters Breakingviews) - For a developi...