Tuesday 12 September 2023

அப்பு பாலன் தியாகிகள் நினைவு - 2023

 தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!



பாசிச பாஜக ஆட்சியை தகர்த்தெறிய, அமெரிக்காவின் புதிய காலனிய ஆட்சிக்கும் அம்பானி-அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பல்களுக்கும் சமாதி கட்ட தியாகிகளின் வழியை உயர்த்திப் பிடிப்போம்.


நாட்டின் மீதான ஏகாதிபத்திய ஆதிக்கத்தை தகர்த்தெறியவும், தரகுமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மைக்கு முடிவுகட்டவும், சாதி, தீண்டாமை கொடுமைகளுக்கு சமாதி கட்டவும், அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ இந்தியாவை ஒரு புதிய ஜனநாயக இந்தியாவாக மாற்றியமைக்கும் புரட்சிகர போராட்டத்தில் முன்னணியாக செயல்பட்டார் புரட்சித் தோழர் பாலன். 1980 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியில் கயவாளி தேவாரத்தால் செப்டம்பர் 12ல் தோழர் பாலன் அடித்துப் கொல்லப்பட்ட நாளை, நாட்டின் விடுதலைக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் போராடி உயிர் நீத்த அனைத்து தியாகிகளின் நினைவையும் லட்சியத்தையும் உயர்த்திப் பிடிக்கும் நாளாகவும், ஆளும் வர்க்கங்களுக்கு சவக்குழிவெட்ட சபதமேற்கும் நாளாகவும் ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினத்தை கடைபிடித்து வருகிறோம்.

ஏகாதிபத்தியத்தை எதிர்த்த தியாகிகளின் வீரம் செறிந்த போராட்டம் என்பது இன்றோ நேற்றோ துவங்கிய போராட்டமல்ல, அவை 300 ஆண்டுகளின் தொடர்ச்சி ஆகும். 1947க்கு முன்பு பிரிட்டன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திரத்திற்காக நெஞ்சுரத்தோடு போராடிய கட்டப்பொம்மன், முதல் மருது சகோதரர்கள் புலித்தேவன், திப்பு சுல்தான், தீரன் சின்னமலை, குதிராம் போஸ், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பாரதியார் வரை எண்ணிலடங்கா தியாகிகளின் லட்சியங்களும், கனவுகளும் இன்னும் முற்றுப்பெறவில்லை. அது வாழையடி வாழையாக இன்றும் தொடர்கின்றது. இந்தியாவில் சோசலிசத்திற்காகவும் ஜனநாயகத்திற்காகவும் தூக்கு கயிற்றுக்கு முத்தமிட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தொடங்கி மார்க்சிய-லெனினிய திட்ட வகைப்பட்ட கட்சியை கட்டியமைத்து இந்திய புரட்சிக்கு வழிகாட்டிய ஏ.எம்.கே முதல் அப்பு-பாலன் வரை அனைவரும் இந்திய புரட்சியின் தியாகிகள் ஆவர்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் 1947க்கு முன்பும் சரி, 1947க்கு பின்பும் சரி இன்றும் தொடர்கின்றன, அன்று வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கொடுங்கோன்மை நிறைந்த நேரடி அடிமை ஆட்சி, இன்று அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்க சுரண்டலுக்கும், அதன் உலக மேலாதிக்கத்திற்கும் சேவை செய்யும் போலி பாராளுமன்றம் போலி சுதந்திரத்தைக் கொண்ட அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு வென்சாமரம் வீசும் அடிமையாட்சி தொடர்கின்றது.




மேலும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான நாடு பிடிக்கும் போட்டியும், ஒடுக்கப்பட்ட நாடுகளின் மலிவான மனித உழைப்பையும், சந்தைகளையும், இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதில் போட்டியும் முராண்பாடுகளும் தீவிரம் பெற்று வருகின்றன. மேலும் ஏகாதிபத்தியங்களின் உயிரம்சங்களான சந்தைகளை கைப்பற்றுவது, மூலப் பொருட்களைக் கைப்பற்றுவது, மூலதனமிடுவது போன்ற கூர்மையான முரண்பாடுகளால் அமெரிக்கா-நேட்டோ முகாமிற்கும், ரஷ்ய-சீனா முகாமிற்கும் இடையில் நடக்கும் உலக மறுபங்கீட்டிற்கான பனிப்போர் ஆழப்பட்டு வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா-சீன ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையில் உலக மறுபங்கீட்டிற்கான பனிப்போர் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தென் சீனக் கடலை மையப்படுத்தி இவ்விரு முகாம்களும் யுத்த தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. மறுபுறம் உக்ரைனில் அமெரிக்கா-நேட்டோ, ரஷ்ய முகாம்களுக்கு இடையில் பனிப்போர் ஆழப்பட்டு உயிர் சேதத்தையும். பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. ஜப்பானின் தலை நகரில் நேட்டோ அலுவலகம் அமைப்பது, உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவது, நேட்டோவிற்கு ஜி.டி.பி-யில் 2% நிதி ஒதுக்குவது, ஐ.டி.பி.பி. (ITPP) திட்டம் மூலம் பசிபிக் பிராந்தியத்திலும் நேட்டோவை விரிவாக்கம் செய்து வருகிறது

இவ்வாறு ஏகாதிபத்திய நாடுகள் தமது செல்வாக்கு மண்டலங்களுக்கான போட்டிகள் மற்றும் யுத்த தயாரிப்புகளால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளின் சுமைகளை உலகம் முழுவதும் தொழிலாளர்கள் மீதும் ஒடுக்கப்பட்ட தேசங்கள் மீதும் மூர்க்த்தனமாக சுமத்தி வருகின்றன. ஏற்கனவே 2008-ல் அமெரிக்காவில் வெடித்து கிளம்பிய உலக முதலாளித்துவப் பொருளாதார மிகை உற்பத்தி நெருக்கடி 1930, 70 களில் ஏற்பட்ட நெருக்கடிகளை பன்மடங்கு அதிகரித்து உலகம் தழுவிய நெருக்கடியாக மாறி வருகிறது.




இந்த நெருக்கடிகளின் தொடர்ச்சியாக தொழில்துறை வீழ்ச்சி, உற்பத்திதுறை வீழ்ச்சி, விவசாய நெருக்கடி, வரலாறு காணாத ரூபாய் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை சரிவு, வேலையின்மை அதிகரிப்பு, வாங்கும் சக்தியின்மை அதிகரிப்பு, ஆலை மூடல், ஆட்குறைப்பு என உலக முதலாளித்துவ பொருளாதாரம் புதை சேற்றில் சிக்கி மரணப்படுக்கையில் இருக்கிறது. உலக அளவில் வேலையின்மை 5.8% சதவிகிதமாக இருக்கும் போது இந்தியாவில் மட்டும் அது 7.95% சதவிகிதமாக  அதிகரித்துள்ளது. மனித வள மேம்பாட்டில் 132 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 



மேலும் இந்த நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் வர்க்கங்கள் மீது சுமத்தப்படுவதை எதிர்த்து உலகம் முழுவதிலும் உள்ள பாட்டாளி வர்க்கம் கடும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இப்போராட்டங்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்கும் உலகம் முழுவதும் பாசிச போக்குகள் தீவிரப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இறுகிவரும் ஏகபோக நிதி மூலதன பாசிசத்திற்கு மோடி கும்பலின் இந்துத்துவ பாசிசம் சேவகம் செய்வதோடு அல்லாமல் அமெரிக்க ஏகாதிபத்திய நிதி மூலதன நெருக்கடி சுமைகளை இந்திய உழைக்கும் வர்க்கங்கள் மீது மூர்க்கத்தனமாக திணித்து வருகிறது இதை எதிர்த்துப் போராடும் உழைக்கும் வர்க்கங்கள் மீது புதிய காலனிய நலன்களிலிருந்தும் ராமராஜ்ஜிய கனவிலிருந்தும் இந்துத்துவ பாசிசத்தை தீவிரப்படுத்தி வருகிறது.


கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக கோடான கோடி உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பால், வியர்வையால் இரத்தத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து வளங்களையும் சொத்துக்களையும், புதிய காலனிய தாசன் மன்மோகன் சிங்கையே மிஞ்சி நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமை நாடாக மாற்றுவதிலும், விவசாயம், தொழிற்துறை, உற்பத்தி துறை, உள்கட்டமைப்பு, இராணுவம், ரயில்வே, விமானம், விஞ்ஞானம், எல்.ஜ.சி. கல்வி, மருத்துவம், சுகாதாரம், கனிம வளங்கள், இயற்கை வளங்கள் அனைத்தையும் ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்திற்கு திறந்துவிட தடையாக உள்ள அனைத்து சட்டங்களையும் நீக்கி ஏகாதிபத்தியவாதிகளின் காலை நக்கிப் பிழைப்பதில் தாசனுக்குத் தாசனாக இந்துத்துவப் பாசிச மோடி கும்பல் செயல்படுகிறது.


2014 நாடாளுமன்ற  தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஊழலை ஒழிப்போம், விலைவாசியை குறைப்போம், சாமானிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை உயர்த்துவோம், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்து ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவோம், கருப்புப் பணத்தை ஒழித்து ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் 15 லட்சம் ரூபாய் வங்கியில் போடுவோம், பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இரட்டிப்பாக்குவோம், நாட்டையே ஒரு சொர்க்கபுரியாக மாற்றுவோம், சுயசார்பு பொருளாதாரத்தை பெருக்குவோம், என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பாசிச மோடி கும்பல் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் அம்பானி, அதானிகளுக்கான இந்தியாவையும், அமெரிக்காவின் புதிய காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்யும் இந்தியாவையும், சிறுபான்மை மக்களையும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களையும் வேட்டையாடும், ரத்தம் குடிக்கும் ராமராஜ்ஜிய இந்தியாவை உருவாக்கி வருகிறது.



பாசிச மோடி கும்பலின் வளர்ச்சி என்பது அம்பானி, அதானி போன்ற தரகு பெரும் முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அமெரிக்காவின் புதிய காலனிய சுரண்டல் முறைக்கும் நாட்டின் சொத்துக்களை திறந்துவிடுவதையே சுயசார்பு, வளர்ச்சி என்று பேசுகிறது. மேலும் மோடி கும்பலின் 9 ஆண்டுகால வளர்ச்சி என்பது பச்சிளம் குழந்தைகளை கற்பழிப்பது, கர்ப்பிணி தாய்மார்களை கற்பழிப்பது, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்வது, பாரத் மாத்தாக்கி ஜே என்று பஜனை பாடி கொண்டே பெண்களை நிர்வாணப்படுத்தி கற்பழிப்பது, கர்ப்பிணி பெண்ணை வயிற்றை கிழித்து உள்ளிருக்கும் சிசுவை சூலத்தில் குத்தி படுகொலை செய்வது, பள்ளிவாசலை இடிப்பது தேவாலயங்களை இடிப்பது, சிறுபான்மை மக்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றி அவர்களது உடைமைகளையும், வீடுகளையும் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்குவது. ராமருக்கு கோவில் கட்டுவது, இந்தியை திணிப்பது, சமஸ்கிருதத்தை திணிப்பது, சாகா பயிற்சி பள்ளிகளை நடத்தி அரம்பை தெங்கால், மெய்தி லீபன், பசுபாதுகாப்பு படை, லவ்ஜிகாத் படை, போன்ற இந்து மதவாத பயங்கரவாத குழுக்களை உருவாக்குவது, குஜராத் மாடல், மணிப்பூர் மாடல், ஹரியானயா மாடல் கலவரங்களை நாடு முழுவதும் கட்டியமைத்து மதக்கலவரங்களையும், இனக்கலவரங்களையும், சாதிக் கலவரங்களையும் உருவாக்கி நாட்டின் பன்முகத்தன்மையை ஒழித்து இரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்பதுதான் மோடி கும்பலின் உண்மையான வளர்ச்சியாகும் இதை மூடிமறைக்கத்தான் தினந்தோறும் ஒரு புதிய இந்தியா பிறப்பதாக கோயாபல்ஸ் வேலையை மோடி கும்பல்கள் செய்துவருகிறது.



மேலும் கடந்த 9 ஆண்டுகளாக மோடி கூறிய டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா, மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா, கிளீன் இந்தியா, தற்சார்பு இந்தியா, வளர்ச்சி இந்தியா, வல்லரசு இந்தியா உள்ளிட்ட எல்லா இந்தியாவும் மக்கள் முன் அம்பலப்பட்டு மாண்டு போயின. தற்போது இவைகளை மூடி மறைக்க ஏழை மகன் நாடகத்தையும் தேசபக்தி வேடத்தையும் முகமூடியாக அணிந்து வருகிறது பாசிச மோடி கும்பல்.இவ்வாறு பாசிச மோடி கும்பல் ஆட்சியில் தேச விரோத - மக்கள் விரோத பாசிச கொள்கைகளால் வேலையின்மை – வறுமை - விலைவாசி உயர்வு – விவசாயிகள் தற்கொலை போன்றவை அதிகரித்துள்ளது. ரபேல் ஊழல், 5ஜி அலைக்கற்றை ஊழல்களைத் தொடர்ந்து பாரத் மாலா ஊழல், துவாரகா நெடுஞ்சாலை ஊழல், அயோத்தியா மேம்பாடு திட்ட ஊழல், சுங்கச்சாவடி ஊழல், ஆயுஷ்மான் பாரத் திட்ட ஊழல், கிராமப்புற மேம்பாட்டு திட்ட ஊழல்  மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 7.5லட்சம் கோடி ஊழலில் ஈடுபட்டுள்ளது என ஊழலை ஒழிக்க வந்த உத்தமர் ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுவதை சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் கார்ப்பரேட் கும்பல்களுக்கு - அதானி அம்பானிகளுக்கு வரிச்சலுகை வழங்கவும், ரூ.14 லட்சம் கோடி வாராக்கடன்களை தள்ளுபடி செய்ததற்காகவும் இந்த 9 ஆண்டுகளில் மட்டும் கூடுதலாக ரூ.100 லட்சம் கோடி அந்நிய கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றியுள்ளது பாஜக ஆட்சி. கருப்பு பணத்தை மீட்க வந்த தேவத்தூதர் தற்போது கருப்பு பண கொள்ளையர்களையும் அதானி போன்ற ஊழல்வாதிகளையும் காக்கும் அனுமாராக மாறிவிட்டது மோடி கும்பல்.நாட்டின் நெருக்கடிக்கும் அழிவுக்கும் காரணமான தாராளமய கொள்கைகளை எதிர்த்தும், நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றும் அரசியல் பொருளாதார ராணுவக் கொள்கைகளை எதிர்த்தும் புரட்சிகர ஜனநாயக சக்திகள் போராடி வருகிறார்கள். அவர்களை ஒடுக்கவும், நாட்டின் வளங்களை சூறையாடுவதற்கு ஏற்பவும் காலனிய காலத்து சட்டங்களை மாற்றுவதாக கூறி அதை விட கொடூரமான (வனப் பாதுகாப்பு சட்டம், பல்லுயிர் பெருக்க சட்டம், சுற்றுசூழல் பாதிப்பு மதிப்பீடு சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், நியாய சன்கிதா மசோதா போன்ற) பல்வேறு பாசிச கருப்பு சட்டங்களை  அவசர சட்டங்களாக கொல்லைப்புறமாக கொண்டு வந்து ஏகாதிபத்தியங்களுக்கு பாத பூஜை செய்கிறது மோடி கும்பல்.


வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றவும், பாசிசப் போக்குகளை தீவிரப்படுத்தவும், நாட்டை ராணுவமயமாக்கவும், ஆர்.எஸ்.எஸ் உதயமான (1925-2025) 100வது ஆண்டில் ராம ராஜ்ஜியத்தையும் அமெரிக்க மாமன் ராஜ்ஜியத்தையும் கட்டியமைக்கும் நோக்கில் அசுர வேகத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும் ராணுவம், காவல்துறை, நீதித்துறை, கல்வித்துறை, ஊடகத்துறை, தொல்லியல்துறை, விஞ்ஞானத்துறை உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ் மயமாக்கி வருகிறது.

எனவே வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் எதைச் சொல்லியும் வாக்கு கேட்க முடியாத பாஜக ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட காவி பயங்கரவாத கூட்டம் மதத்தின் பெயரிலும், இனத்தின் பெயரிலும், சாதியின் பெயரிலும் கலவரத்தைத் தூண்டி குளிர் காய தயாராகி விட்டார்கள். 



இவர்களின் தேச பக்தி என்பது ராமன் பக்தியும் அனுமார் பக்தியுமே ஆகும். வெள்ளைக்காரன் காலை நக்கிப் பிழைத்த அடிமை சாவக்கரின் வாரிசுகளின் அனுமார் வாலை அறுத்தெறியாமல், இருக்கும் அரைகுறை ஜனநாயகத்தைக் கூட பெற முடியாது.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே சட்டம், ஒரே வரி, ஒற்றை கட்சி ஆட்சிக்கு திட்டமிடும் பாசிச பயங்கரவாத கூட்டத்திற்கு பாடை கட்ட - மதக்கலவரத்தை தூண்டும் பாசிச பாஜக ஆட்சியை தகர்த்தெறிய, அமெரிக்காவின் புதிய காலனிய ஆட்சிக்கும் அம்பானி-அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பல்களுக்கும் சமாதி கட்ட தியாகிகளின் வழியை உயர்த்திப் பிடிப்போம்! 

அந்த லட்சிய தீபத்தில் பாசிச கும்பலை கருவறுக்க புரட்சித் தீயை மூட்டுவோம்; புதிய ஜனநாயக அரசமைக்க புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுவோம், போராடுவோம்.

* நாடெங்கும் மணிப்பூர், ஹரியானா மாடல் கலவரங்களை கட்டியமைத்து ஆட்சியை பிடிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவின் சதிகளை முறியடிப்போம்!

* ஜப்பான் ஏகாதிபத்தியம் மற்றும் அம்பானி-அதானியின் வேட்டைக்காடாக வடகிழக்கு மாநிலங்களை மாற்றும் பாஜக ஆட்சிக்கு சவக்குழி வெட்டுவோம்!

* கார்ப்பரேட் நலன்களுக்கான வனப் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு சட்டங்களை எதிர்ப்போம்!

* புதிய காலனிய நலன்களுக்கான இந்திய சாட்சியச் சட்ட திருத்தம், தண்டனை மற்றும் குற்றவியல் சட்ட திருத்தங்களை எதிர்ப்போம்!

* டெல்லி யூனியன் பிரதேச சட்டத்தை எதிர்ப்போம்! மாநில உரிமைகளுக்காகப் போராடுவோம்!

* வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க  வக்கற்ற மோடி ஆட்சி ஒழிக!

தி.மு.க அரசே!

* நாங்குநேரி சின்னதுரை குடும்பம் மீதான சாதிய வன்கொடுமைக்கு காரணமான சாதிவெறியர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்!

* கல்வித்துறையில் ஊடுருவியுள்ள சாதிவெறி -  சங்பரிவார கும்பலை களையெடு!


> அமெரிக்காவின் தெற்காசிய மேலாதிக்கத்திற்கான நேட்டோ - இந்தோ பசிபிக் கூட்டமைப்பை (NATO -IP4) எதிர்ப்போம்!

> அமெரிக்க - ரசிய ஏகாதிபத்திய நாடுகளே!  உக்ரைனிலிருந்து வெளியேறு!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்நாடு

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...