Saturday 25 November 2017

மாவீரர் நாள் 2017


மாவீரர் நாள் 2017

‘’புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’ என முழங்கி, ஏறத்தாள ஐந்நூறு ஆண்டுகளாக அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கும், சிங்கள,இந்தியஆக்கிரமிப்பாளர்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கும் ஈழத் தமிழினத்தை தூக்கி நிறுத்த முப்பது ஆண்டுகள் ஆயுதமேந்திப் போராடி, உயிர்விடும் வேளையிலும் தமிழீழமென உரைத்த. விடுதலைப் புலிகளின்நினைவுகளை மீட்டெடுத்துச் செல்வதற்கான நிகழ்வாகும்.
மிழீழ விடுதலைப்புலிகளின் வீரத்தலைவர் வன்னி பத்திரிகையாளர் மாநாட்டில் மறுபிரகடனம் செய்தது போல கூட்டணியினர் சிரமேற்கொள்ளத் தவறிய 1977 ம்ஆண்டுப் பொதுத்தேர்தல் தீர்ப்பான “ஈழப்பிரிவினையே தீர்வு” என்ற மக்களாணையை “உயிர்விடும் வேளையிலும் தமிழீழமே” என உரைத்தவரே சிரமேற் கொண்டனரென்பதுவும் அதனாலேயே ஒடுக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருப்பார்கள் என்பதும் திண்ணம்.

இவர்கள் தமது வரலாற்றுக்கட்டத்தில் ஆற்றிய விடுதலைப் பணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வரலாற்றுப் பொறுப்பு எமது கையில் உள்ளது.

இந்த வருட மாவீரர் நினைவுகளின் மீட்டெடுப்பானது ஒரு தனிவிசேடச் சிறப்புடையது.

தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை அரசியல் திட்டமாகக் கொண்டு , தன்னுடைய சொந்த ரஷ்ய நாட்டுக்கும், சர்வதேச தேசிய இன ஒடுக்குமுறைக்கும் தீர்வாக வரையறுத்த ரஷ்ய பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நூற்றாண்டு நினைவு கூரல்களோடு இந்த மாவீரர் நிகழ்வு இணைந்துள்ளது.

இதனுடைய முக்கியத்துவம் என்னவென்றால் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டை ஒருபோதும் பேரப்பொருளாக மாற்றக்கூடாது.

ஏகாதிபத்திய தாசர்கள், ரொட்ஸ்கைட்டுக்கள்,ரசிய சீன திருத்தல்வாத இடதுசாரிகள்,சண்முகதாசன் உள்ளிட்ட ``கம்ஜூனிஸ்ட்டுகள்`  இவர் வழி வந்த  குட்டி முதலாளித்துவ இனத்துவவாதிகளும் இதனைத் தொடர்ந்தனர்.

1985  திம்புக்கோரிக்கையைக் 1987 இல் கைவிட்டனர்!

மட்டற்ற மக்களது அர்ப்பணத்தில் மூன்றாவது முயற்சியாக
ஆனையிறவை வீழ்த்தி விட்ட இராணுவ வல்லமையில் இந்தப் பேர துரோகத்தை விடுதலைப் புலிகளே இழைத்தார்கள்.

1976 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு,1977 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஒடுக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களின் ஆணையைப்பெற்ற “ஈழப்பிரிவினையே தீர்வு” என்ற பொதுவாக்கெடுப்புத் தீர்ப்பை மீறினார்கள்.

பாலசிங்கத்தின் அகசுயநிர்ணய உரிமைப் பேரமானது ஈழதேசத்தின் சுயநிர்ணய உரிமை என்பதை அதிகாரப்பரவலாக்கலாக குறுக்கி ISGA என்ற மாநில ஆட்சியதிகாரத்தை பற்றிக்கொள்ளலாம் என்ற நப்பாசையில் நடாத்தப்பட்டது.

புலிகளின் தாகம் தமிழீழம் என்ற தாயகக் கோட்பாட்டை கைகழுவி விட்ட சந்தர்ப்பவாதப் போக்கிற்கு எங்கள் தேசம் கொடுத்த விலை
முள்ளி வாய்க்கால்.

இவ்வாறு ஈழதேசிய விடுதலை இயக்கம் முள்ளிவாய்க்காலில் மாண்டு மரணித்துப் போனது போல் பிரிட்டிக்ஷ், பிரெஞ்சு , அமெரிக்க ஏகாதிபத்தியங்களை எதிர்த்த தேசிய இயக்கங்களெதுவும் சுதந்திர அரசுகளை நிறுவிக் கொள்ளவில்லை.

முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட மான ஏகாதிபத்தியக் காலத்தில் மேலைநாடுகளில் சோஷலிசப்புரட்சிக்கான இயக்கங்கள் கோரப்படும் காலத்தில்,

கீழைநாடுகளில் ஏகாதிபத்தியச் சுரண்டல் முதலாளித்துவ வளர்ச்சியை அநுமதிக்காமையின் காரணத்தால் புதிய ஜனநாயகப் புரட்சி மற்றும் தேசிய சுயநிரணய உரிமையைப் போராட்டங்களைக் கோரி நிற்குமொரு காலத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

பன்னூறு சீவ நதிகள் ஓடும் இந்தியத் திருநாட்டில் ஏகாதிபத்திய அடிமை அரசுகளின் கொடுங்கோன்மை நிலவுவதால் குடிநீர்ப்பஞ்சம் குரல்வளையைக் குதறுகின்றது.
ஆனால் கேணல் கடாபி அவர்கள் கட்டியமைத்த முதலாளித்துவ அரசு லிபியா என்ற பாலைவனத்திலேயே தண்ணீர்ப்பிரச்சனையைத் தீர்த்து வைத்தது.

முற்போக்கு, பிற்போக்கு என எக்கூறாக நீங்கள் உலகைப் பாகுபடுத்தினாலும் வாழ்க்கையின்யதார்த்தம் என்பதனை அனைவரும்ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும்.

இலங்கையில் மன்னராட்சி செய்த விவசாயக் கட்டுமானங்களே வன்னிப்பெருநிலத்தின் செழிப்புக்கு கட்டியம் கூறி நிற்கும் பாசனக் குளங்கள் என்றால் அது மிகையாகாது.

பிரித்தானிய காலனியாதிக்கம் தன்னுடைய உலகைச்சுரண்டும் ஏகாதிபத்திய நலனுக்காக பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையை எங்கள் மலையகத்தில் புகுத்தியது.

அவர்களின் இலாபவெறி இன்னொரு காலனி நாடான இந்தியாவிலிருந்து குறைந்த கூலிச் சுரண்டலுக்காக மனித உயிர்களை மிக மோசமான வழிகளில் வேரோடு பிடுங்கி இடம் மாற்றியது.

தேசத்தின் சீவனோபாய விவசாய உற்பத்தி சீரழிக்கப்பட்டது.
ஏகாதிபத்திய தாச இனப்படுகொலை அரசு இன்னமும் அதனை மற்றொரு வடிவத்தில் தொடர்கின்றது.

அந்நிய நிதிமூலதனத்திற்கு சேவை செய்யும் சேவைத்துறை உற்பத்தி சார்ந்த புல்லுருவி முதலாளிகளுக்காக சர்வதேச வர்த்தக வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டு குறைந்த கூலிக்கு ஏகபோக பகாசுர
நிறுவனங்களுக்காக ஆடை தயாரிக்கும் தையலகங்கள் நிறுவப்பட்டது. உழைக்கும் வர்க்கம் இடுப்பு முறிந்து புலம்பியது.
அணிதிரட்டிப் போராடும் பணியாற்ற யாருமில்லை.

இடதுசாரிகள் என்ற போர்வையிலிருந்த ட்ரொட்ஸ்கைடுகள் பலகூறாகி ஆளுங்கும்பல்களின் பல்வேறுபிரிவுகளிடமும் பதவிப்பிச்சை பெற்றார்கள்.

முற்றுமுழுதாக அந்நிய நிதி மூலதனத்தில் நடாத்தப்படும் ஊகவாணிப சூதாட்டமான பங்குச்சந்தை.
சுற்றுலா என்ற பெயரில் நடாத்தப்படும் மானுட விரோத சிறுவர், சிறுமிகளைத் துன்புறுத்தும்பாலியல் வக்கிரங்களின் தாண்டவக் கூத்து.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பா உ சிறிதரனின் பாராளுமன்ற உரையின்படி தமிழர் தாயகத்தில் ஏழாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இனப் படுகொலை இராணுவம் பயிர்ச்செய்கை நடாத்துகின்றது.

விடுதலைப்புலிகள் வீழும்வரை இவ்வகையிலான நில ஆக்கிரமிப்புக்கள் நடக்க அவர்கள் அநுமதிக்கவில்லை.

சீன, இரஷ்ய சார்பு “துட்டகெமுனு” மகிந்தவை சதிப்புரட்சியில் வீட்டுக்கனுப்பி விட்டு அமெரிக்க, இந்திய சார்பு ரணில் கும்பலும், முள்ளிவாய்க்காலின் இறுதிநாட்களில் பாதுகாப்பு அமைச்சனாய் நின்ற இனப் படுகொலையாளன் மைத்திரியும் அரங்கேற்றும் “Regaining Srilanka”என்ற ஏகாதிபத்திய மறுபங்கீட்டு திட்டத்திற்கு முழு இலங்கையையும் கூறு போட்டு விற்கும் பிற்போக்கு தலை விரித்தாடும் காலத்தில்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அந்நியக்கடன்கள் எவ்வளவு? என்று தெரியாதென
பிரதமர் ரணில் பகிரங்கமாக ஒப்புக்கொள்கின்றார்.
அந்த கடன் சுமையானது முள்ளி வாய்க்காலில்
புலிகள் வீழ்ந்த பின்னரேயே கடுகதி ஆனதென்பதனையும் புள்ளிவிபரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

இந்த அடிமை அரசு அரசுக்கட்டிலேறிய சதிப்புரட்சியில் சாணக்கியர் சம்பந்தனின் சம்பந்தம் நாடறிந்தது.
இன்றும் எதிர்க்கட்சித்தலைவராக பணியாற்றுவதாக பறைசாற்றிக்கொண்டு சர்வதேச யுத்த நியமங்களை மீறிய அரசைக் காப்பாற்ற , யுத்தக்கைதிகளின், காணாமல் போனோரின் விடுதலைக்காக வீதியில் திரளும் மக்களை
“படுபாதக குற்றவாளிகளுக்காகவா வாதிக்க வருகின்றீர்கள்” என்று மிரட்டித் தன் எசமானர்கள் யாரென்பதை வெட்ட வெளிச்ச மாக்குகின்றார்.

முன்னாள் முதன்மை இராணுவத்தளபதியோ”அவர்கள் விடுதலைப் புலிகள்.. சாகும் வரை அவர்களை சிறைச்சுவர்களத் தாண்டவிடமாட்டோம்” என்று சர்வதேச யுத்த நியமங்களைக் காலில் போட்டு மிதிக்கின்றார்.

மானுடநேயம் மீதூரப் பெற்ற தென்னமெரிக்கர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டால் இன்னொரு தளபதி கைது செய்யப்படும் நிலைவந்தபோது நல்லிணக்க நாயகன் அத்தளபதியின் மேல் தூசி படுவதனைக்கூட தான் அநுமதிக்கப் போவதில்லை என்று தாவிக் குதித்தார்.

ஊருக்கு ஊர் தெருவுக்குத் தெரு,வீட்டுக்கு வீடு ..வாசலுக்கு வாசல்.. குடும்பத்துக்கு குடும்பம் ..

வீர விடியலுக்காய் தத்தம் உறவுகளைத் துறந்து உயிர்களைத் துச்சமென மதித்து கார்த்திகைத் தீபங்களான நம் கண்ணின் மணிகளுக்காய சாவினைத் தோளினில தாங்கி நடந்திட்ட சந்தனப் பேழைகளுக்காய் நமது பணி இனி என்ன?

உலக வரலாற்றில் தேசீய இனப்பிரச்சனையின் வரலாற்று அநுபவங்களை நாம் தேடிப் , படித்து தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டும்.

1)
முதலாளித்துவ உதய காலகட்டத்தில் நடந்த பிரெஞ்சுப்புரட்சியின் அநுபவங்கள். அமெரிக்க தேசீய விடுதலை, சுவீடனிலிருந்து நோர்வே பிரிந்தது.

2)
ஆசியாக்கண்டத்தில் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமான பிரிட்டனின் ஆதிக்கமும், ஆபிரிக்க கண்டத்தில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் கொடுமுடியும் வலுப்பெற , உருவான உலக மறுபங்கீட்டுப் போட்டாபோட்டி முதலாம் உலகப்போராக வெடித்த காலத்தின் தேசிய இனப்பிரச்சனைகள்

3)

உலகப்போர்க்கட்டத்தில்

இரண்டாம் அகிலத்தின் ஓடுகாலிகள் “தாயக அரசைக் காப்பாற்றுவோம்“ என அந்த அந்த நாட்டின் அரசுகளை, ஆளுங்கும்பல்களைக் காப்பாற்ற முனைந்தபோது “ஏகாதிபத்திய சார்பு ஆளும் வர்க்கங்களை எதிர்த்து உள்நாட்டு உழைக்கும் வர்க்கம் புரட்சிப் பதாகையைத் தாங்கிப்பிடித்து உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும்” என்ற தோழர் லெனினின் வழிகாட்டல்களைத் தேடிப் படியுங்கள்.

4)

 சோவியத் யூனியனின் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை உயர்த்திப்பிடித்து பூவுலகின் பொன்னுலகு உருவான வரலாற்றை அறியுங்கள்.

5)

இன்றைய காலத்தின் சக தேசீய இனப்பிரச்சனைகள் பற்றியும் விழிப்போடிருங்கள்...விமர்சனபூர்வமாக அணுகி வினயத்துடன் கைகுலுக்கிக் கொள்ளுங்கள்.

கற்றலோனியாவின் காஸ்மீரின் குர்திஸ்தானின் சுயநிர்ணய உரிமை அரசியல் போராட்டங்களில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்!

6)

“தேசிய இனச்சிக்கலுக்கு பொது வாக்கெடுப்பு என்ற தீர்வை முன் மொழிந்து அதற்காகப் போராடுங்கள்”

“பொது வாக்கெடுப்பு ஒடுக்கப்பட்ட தேசமக்கள் மத்தியில் மட்டுமே

அதுவே ஜனநாயகம் என்று முழங்குங்கள்.”

ஒடுக்கும் தேசத்தையும் வாக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற ஜனநாயக விரோதத்தை அநுமதிக்காதீர்கள்!

இவ்வகையிலான வரலாற்று அநுபவங்களே உங்களுக்கு வழிகாட்டும் கார்த்திகை தீபங்கள்.

இந்த அநுபவங்களை செழுமைப்படுத்தி பிரயோகிப்பதுமே
கார்த்திகை தீபங்களின் காலடியில் வைத்து வணங்கிடத் தக்க கார்த்திகைப் பூக்கள்.

7)

லெனினியக் கோட்பாட்டை தேசிய விடுதலைக்கான தத்துவார்த்த வழிகாட்டுதலாக கொள்ளாத எந்த ஒரு தேசிய விடுதலைப் போராட்டமும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.

முரட்டுத்தனமான பிடிவாதமுள்ள வரலாறு தனது நியாயத்தை மீண்டும் மீண்டும் நிலைநிறுத்தியே தீரும்`.

மாண்ட நம் மக்களே மாவீரத் தோழர்களே செவ்வணக்கம்

குறிப்பு: Enb has made changes of the original artical published in FB with the full permision of the writer

கத்தோலிக்க பிதாக்கள் பெறும் பிள்ளைகள் கேரளத் திரைப்படம்

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...