Wednesday 13 October 2021

மலையக மார்க்சிய ஆர்வலர் சாந்தி குமாருக்கு முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி


 1960-70 பத்தாண்டு காலம் உலகவரலாற்றில் முக்கியமான தசாப்தமாகும்.உலகமுதலாளித்துவம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருந்தது.

1949 இல் வெற்றி வாகை சூடிய மக்கள் சீனம் கலாச்சாரப்புரட்சி நடத்திக்கொண்டிருந்தது. 

வியட்நாம் அமெரிக்க எதிர்ப்பு தேசபக்த யுத்தத்தில் குதித்திருந்தது.

இந்தியாவில் வசந்தத்தின் இடிமுழக்கம் நக்சல்பாரி-உழுபனுக்கு நிலம்-ஆயுதம் ஏந்திய விவசாய கிளர்ச்சி வெடித்திருந்தது.

உலக முதலாளித்துவ நெருக்கடியை எதிர்த்த போராட்டங்கள் மேலை நாடுகளில் பரந்துவிரிந்தன. 

பிரித்தானியாவை உலுக்கிய 10 ஆண்டுகளாக வரலாற்றில் இத் தசாப்தம் பதியப்பட்டுள்ளது. 

வியட்நாம் போர் எதிர்ப்பு முழக்கங்கள் விண்ணதிர ஒலித்துக் கொண்டிருந்தன.

1953இல் ஸ்ராலின் இறந்தார்.அதுவரை ஏகாதிபத்திய உலகத்துக்கு சிம்ம சொர்ப்பனமாய் இருந்தார்.

மொஸ்கோ அயல் மொழிப் பதிப்பகம், சீன மக்கள் குடியரசு மார்க்சிய லெனினிய நூல்களை எண்ணற்ற தாய்மொழிகளில் அச்சிட்டு `உலகமெல்லாம் பரவ வகை` செய்தது.

சுருங்கச் சொன்னால் மேலைக் காற்றும், கீழைக்காற்றும் ஒரு சேர வீசியது.

ஒருபுறம் ஏகாதிபத்திய எதிர்ப்பு-தேசிய-இயக்கங்கள் எழுந்தது, மறு புறம் மார்க்சியம் பரவியது.பஞ்சும் நெருப்பும் அக்கம் பக்கமாக இருந்தன.எப்பேற்பட்ட பயங்கரம்!

இந்தப் புறச்சூழலில் தான்  ( இத் தசாப்தத்தில் )- தொடர்காலனிய நாடான இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்தது. புகழ் போர்த்த `சத்தியாக்கிரகம்` 1961 இல் தான் நடந்தது. .குடியுரிமை பறிக்கப்பட்டதன் பின்னால் முதல் தடவையாக 05-08-1960 இல் தொண்டமான் சட்டமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். Dr Badi-ud-din Mahmud , He was a Sri Lankan politician. He served 10 years [(23 July 1960 – 28 May 1963) and (31 May 1970 – 23 July 1977)] as Minister of Education and also held the office of Minister of Health and Housing.இவருடைய பதவிக்காலம் இலங்கைச் சோனகரின் பொற்காலமாகும்.

இவ்வாறு சட்டமன்றத்தை மையப்படுத்திய அரசதிகார போட்டியில் ஆளும் வர்க்கப் பிரிவுகள் ஈடுபட்டுக்கொண்டிருந்த கொந்தழிப்பான அரசியல் சூழலில் சண்முகதாசன் சாதிப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்.

இலங்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய ஜனநாயக விடுதலைப் புரட்சி மூன்று திட்டமிட்ட சதிகளால் முறியடிக்கப்பட்டது.

1) ரொட்ஸ்கியவாதம்.

2) தமிழ்த் தரகு பிரபுத்துவ வர்க்கத்தின் `குறுமினவாதம்`

3) சண்முகதாசனின் சாதியவாதம். 

இக்கையறு நிலையில் தத்துவார்த்த அரசியல் தலைமை வெறுமை,வறுமை நிலவிய காலம் அது.

இந்த இடைவெளியில் தான் 1976 இல் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு கருத்தரித்தது.

ஆனால் அன்றைய சமுதாய தேவைக்கு இது போதுமானதாக இருக்கவில்லை.

ஏனெனில் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய ஜனநாயக விடுதலைப் புரட்சி கண்ணோட்டம் ஏற்கெனவே கரு நிலையில் உருவாகி இருந்தது.

இது மிகவும் அலங்கோலமாகவும், சில வேளைகளில் மிக மிக அசிங்கமாகவும்,சிதிலமாகவும், சின்னா பின்னப்பட்டும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

இதைச் செப்பனிட முயன்ற ஒரு சிற்பி சாந்திகுமார்.

1) தேசிய இனப்பிரச்சனை குறித்த மார்க்சிய போதனைகளை அவர் கற்றறிந்திருந்தார்.

2) இது ஏகாதிபத்திய காலகட்டம் என்பதை புரிந்திருந்தார்.

3)ஈழம் என்கிற தேசத்தை- தமிழர் சோனகர் மலையகத்தவர்-அடங்கிய சமூகத் திரளின் ஆள்புலம் என வரையறை செய்தவர் அவர்.

இவரின் தத்துவ வாதம் இயல்பாகவே அதிக தூரம் செல்லவில்லை.

ஈழதேசத்தின் சமூக வர்க்க கட்டமைப்பில் மலையகம் தாழ்த்தப்பட்டுக்கிடக்கின்றது.

இதன் விளைவாக அச்சமூக  சிந்தனையாளர்களும் ஈழ அரங்கில் இல்லாது அழித்தொழிக்கப்பட்டு விட்டார்கள்.

இந்த இழி நிலைக்கு முடிவுகட்டுவோம்.

ஈழ தேசிய ஒற்றுமையை இறுகப்பற்றுவோம்.

சாந்தி குமார் கருத்தாக்கத்தை வளர்த்தெடுப்போம்!

No comments:

Post a Comment

2024 மே நாளில் சூளுரைப்போம்!

  2024 மே நாள் வாழ்க! உலக உழைக்கும் மக்கள், மாதர், தொழிலாளர் விவசாயிகள், ஒடுக்கப்படும் தேசங்களின் ஒப்பற்ற புரட்சிகர மே தினம் நீடூழி வாழ்க!! ...