Wednesday 2 March 2011

அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியமே லிபிய மக்கள் விவகாரத்தில் தலையிடாதே!

கடாபியின் சர்வாதிகார அரசை எதிர்த்த லிபிய மக்களின் ஆயுதக்கிளா்ச்சியை ஆதரிப்போம்!

அமெரிக்க, ஐரோப்பிய, ஐ.நா அந்நியத் தலையீட்டை எதிர்ப்போம்!!


* மத்திய கிழக்கு, வட அமெரிக்க நாடுகளில் எண்ணெய்ப் பிரபுக்களினதும், குலக்குழு மன்னர்களதும், குடும்ப சர்வாதிகார அரசுகளை ஊன்றி, ஊட்டி வளர்த்து பாதுகாத்தவர்கள் ஐரோப்பிய அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளே!

* அந்நாடுகளின் ஏற்றத்தாழ்வுக்கும், வறுமைக்கும், வேலையின்மைக்குமான ஊற்றுமூலம் ஏகாதிபத்திய பொருளாதார உலகமயமாக்கல் திட்டமே! ஊழலின் ஊற்றுவாய் உலகமயமாக்கலே!

* மத அடிப்படைவாத, பயங்கரவாத, சிந்தனைப்போக்கு அரசியலில் செல்வாக்குச் செலுத்துவதற்கான அடிப்படை, உலகமயமாக்கலின் விளைவாக உள்நாட்டு உபரி மூலதனத்தை ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்துக்கொள்வதால், உள்நாட்டுப் பொருள் உற்பத்தி முறை முதலாளித்துவத்துக்கு முந்திய நிலையில் நீடிப்பதாகும்!

* மேலும் இஸ்ரேல் என்கிற அமெரிக்க இராணுவத்தளம் இப்பிராந்தியத்தில் தொடர்ந்து மூட்டிக் கொண்டிருக்கும் யுத்த ஆக்கிரமிப்பு நெருப்பு நாசகாரத்தனமானதாகும்!

* எனவே மத்தியகிழக்கு, வட அமெரிக்க நாடுகளின் பின்தங்கிய நிலைக்கு நேரடிப்பொறுப்பாளிகள் ஏகாதிபத்தியவாதிகளே!

* இன்று மூண்டுள்ள நெருப்பு இதற்கு முடிவுகட்டுமா என்பது இத் தேசிய ஜனநாயக இயக்கத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலையின் உறுதிப்பாட்டிலேயே முற்றும் தங்கியுள்ளது.

* இதற்கு முதல்படி இத் தேசிய ஜனநாயக இயக்கத்திற்குள் ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து ஊடுருவலையும் முளையிலேயே கிள்ளி எறிவதாகும்.

வரலாற்றுப் படிப்பினைகள்:

1) முதலாவது ஏகாதிபத்திய உலக மறுபங்கீட்டு உலகப் போரின் உடனடி விளைவாக 1917 ஒக்ரோபர் ரசிய சோசலிஸப் புரட்சி உலகத்தில் முதல் தடவையாக ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகார அரசை உருவாக்கியது.இதன் தலைமையில் ஒரு சோசலிச உலகம் உருவாகியது.

மனித சமுதாயத்தின் நவீன - முதலாளித்துவ- வரலாற்றில், இது முதலாவது மாபெரும் புரட்சியாகும்.

(உள்நாட்டு சர்வதேச ஏகாதிபத்திய சதியால் இப் புரட்சி முறியடிக்கப்பட்டது)

2) முதல் உலக சோசலிசப் புரட்சியைத் தொடர்ந்து நேரடிக் காலனியாதிக்கம் முறியடிக்கப்பட்டு காலனி நாடுகள் ‘சுதந்திரம்’ பெற்றன.

இது இரண்டாவது மாபெரும் புரட்சியாகும்.

(எனினும் முன் கதவால் வெளியேறிய ஏகாதிபத்திய சுரண்டல் பின்கதவால் வந்து நிலை கொண்டது.)

3) திரிபுவாத சோவியத் சமூக ஏகாதிபத்தியம் வீழ்ந்து நொருங்கியது.அதன் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள் சிதறுண்டன.

இது மூன்றாவது திருப்புமுனையான நிகழ்வாகும்.

(எனினும் இந்நாடுகள் ஏகாதிபத்திய உலக மறுபங்கீட்டின் ஏதோ ஒருவகைத் தளங்களாகின,)

4) இதன் தொடர்ச்சியாக ஏகாதிபத்தியத்தையும் அதன் காவல் நாய் அரசுகளையும் எதிர்த்து, மக்கள் பிரதிநிதித்துவ குடியாட்சிக்கான
தேசிய ஜனநாயக இயக்கம் மத்திய கிழக்கு, வட அமெரிக்க நாடுகளில் தற்போது (2011) மூண்டுள்ளது.

இது நான்காவது மாபெரும் புரட்சிகர மக்கள் இயக்கமாகும்.

* முதல் மூன்று புரட்சிகளும் முற்றுப்பெறாதபோதும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சோசலிச தேசிய ஜனநாயக இயக்கங்களை அவை உந்தித்தள்ளின.

* இந்த நான்காவது புரட்சி அவ்வியக்கத்திற்கு புதிய வல்லமைகளை வழங்கும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. அத்திசைவழியில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.

**அதனால் அவற்றை ஏற்று ஆதரிப்போம்! அந்நியத் தலையீட்டை எப்போதும் எதிர்ப்போம்!

** மத்திய கிழக்கு, வட அமெரிக்க நாடுகளின் தேசிய ஜனநாயக இயக்கங்கள் ஓங்குக!

** அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளே அவர்கள் தலைவிதியில் தலையிடாதீர்!

** லிபிய மக்களின் எண்ணெய்வளத்தைக் கொள்ளையிட அந்நாட்டைத் துண்டாட கனவு காணாதீர்!

** ஆபிரிக்க அரசுகளே, லிபிய மக்களின் விடுதலை வேட்கையை நசுக்கும் கடாபி பயங்கரவாதிக்கு, கூலிப்படைகளை கொடுத்து அரசபயங்கரவாதத்துக்கு துணை போகாதீர்!

** எகிப்திய, துனூசிய இளம் மக்களே லிபிய மக்களைத் தாக்கியழிக்க ஏகாதிபத்தியவாதிகள் உங்கள் நாடுகளில் தளம் அமைக்க அநுமதியாதீர்!

ஐ.நா.ஒழிக!   நேற்றோ ஒழிக!

லிபிய மக்களின் ஆயுதக் கிளர்ச்சி வெற்றிபெறுக!

தேசிய ஜனநாயக சோசலிசப் புரட்சிகள் ஓங்குக,

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!

=======  புதிய ஈழப்புரட்சியாளர்கள் =======

No comments:

Post a Comment

2024 மே நாளில் சூளுரைப்போம்!

  2024 மே நாள் வாழ்க! உலக உழைக்கும் மக்கள், மாதர், தொழிலாளர் விவசாயிகள், ஒடுக்கப்படும் தேசங்களின் ஒப்பற்ற புரட்சிகர மே தினம் நீடூழி வாழ்க!! ...