Friday 11 September 2009

புலிகள் அழிந்ததன் பின்பும் மக்கள் துன்பப்படவேண்டுமா? இரா.சம்பந்தனே இவ்வாறு கூறினார்.
யாழ் உதயன்
வடக்கு, கிழக்கில் இருக்கின்ற இராணுவ முகாம்கள், சோதனைச் சாவடிகள், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் போன்றவற்றை அங்கிருந்து நீக்கி அங்கு புதிதாகப் படையினர் குவிக்கப் படுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடா ளுமன்றில் அரசிடம் கோரிக்கை விடுத்தது.அத்தோடு துணை ஆயுதக் குழுக்களை முற்றாகக் கலைத்து மக்களின் பாதுகாப்பை அதிகரிக்க வழிசெய்ய வேண்டும் என்றும் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது.நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற் றிய கூட் டமைப்பின் தலைவர் இரா.சம் பந்தனே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:அகதி முகாம்களில் தடுத்துவைக்கப் பட்டிருக்கின்ற 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை மிகவும் மந்தமாகவே இடம்பெறுகின்றது.180 நாள்களுக்குள் இம்மக்கள் மீள்குடியமர்த்தப்படுவர் என்று அரசு கூறியது. மூன்று மாதங்கள் கடந்து விட்டன. 10 வீத மான மக்கள் கூட இன்னும் குடியமர்த்தப்படவில்லை. இதை அரசிடம் நாம் சுட்டிக்காட்டினோம். ஆனால் அரசு விரைவில் செய்யமுடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றது. இந்த மக்களை உடனடியாகக் குடியமர்த்தி அவர்களுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் பொறுப்பு. மக்கள் அகதிபோல் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களைச் சந்திக்கும் உறவினர்களுடன் உரையாட முடியவில்லை.அரசின் மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பில் சர்வதேசம் மகிழ்ச்சியடையவில்லை. முகாம்களைச் சுற்றி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழ் படையினர் அல்லர். இந்த அகதிகளை அந்தப் படையினர் பாசத்துடன் நடத்தமாட்டார்கள்.அகதி முகாம்களில் மக்கள் குடியமர்த்தப்படும்போது இடம்பெயர்ந்து தற்போது புத்தளத்தில் உள்ள முஸ்லிம்களும் குடியமர்த்தப்படவேண்டும் என்று நாம் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டோம். இது சமகாலத்தில் இடம்பெறவேண்டும்.மீள்குடியேற்றம் தொடர்பான அரசின் தற்போதைய கொள்கைத் தொடர்பில் எம்மால் மகிழ்ச்சியடைய முடியாது. நாம் முகாம்களுக்குச் சென்று அம் மக்களைப் பார்வையிட்டு அவர்களுக்குச் சேவை செய்யவும், மீள்குடியேற்றத்திற்கு உதவவும் விரும்புகிறோம்.பருவ மழை ஆரம்பமாகப் போகிறது. அது ஆரம்பமானால், நிலைமை இன்னும் மோசமாகும். அதற்கு முன் மக்கள் குடியமர்த்தப்படவேண்டும்.கண்ணிவெடிகள் அகற்றலைக் காரணங்காட்டி மீள்குடியேற்றத்தைத் தாமதப்படுத்த முடியாது. கண்ணிவெடிகள் அகற்றத் தேவையில்லாத பகுதிகள் தொடர்பாக நாம் அரசிடம் பட்டியல் ஒன்றைக் கையளித்துள்ளோம். அந்த இடங்களில் முதலில் மக்களை மீள்குடியமர்த்தலாம்.இந்த மக்கள் கடந்த மூன்று வருடங்களாக துன்பம் அனுபவித்து வருகின்றனர். புலிகள் அழிந்ததன் பின்பும் மக்கள் துன்பப்படவேண்டுமா? முகாமில் உள்ள நூறு, இருநூறு புலிகளைக் கண்டுபிடிப்பதற்காக இந்த மக்கள் அனைவரையும் தொடர்ந்து அரசு தடுத்துவைக்கப் போகிறதா?வடக்கு, கிழக்கில் இயங்குகின்ற துணை ஆயுதக் குழுக்கள் முற்றாகக் கலையப்படவேண்டும். யுத்தக் காலத்தின்போது அக்குழுக்களின் தேவை அரசுக்கு இருந்திருக்கலாம். அதனால், அக்குழுக்கள் இருப்பது மக்களின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.அதேபோல், வடக்கு, கிழக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயம், இராணுவ முகாம்கள், சோதனைச்சாவடிகள் உடன் நீக்கப்படவேண்டும். இவற்றைப் புதிதாக அமைக்கும் நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும்.அந்தப் பகுதியில் புதிதாகப் படையினர் குவிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். படையினரின் இருப்பு மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எமது மக்கள் அடிமையாகவே நடத்தப்படுகின்றனர்.பெரும் எண்ணிக்கையிலான படையினர் வடக்கு, கிழக்கில் இருப்பதால் அரசின் புலனாய்வு நடவடிக்கைக்கும் தடை ஏற்படும். வடக்கு, கிழக்கில் யுத்தத்திற்கு முன்பு இருந்த நிலை மீண்டும் ஏற்படுத்தப்படவேண்டும்.அதேபோல் எமது எம்.பிக்களின் பாதுகாப்பையும் அரசு அதிகரிக்கவேண்டும். நாம் மூன்று எம்.பிக்களை இழந்திருக்கின்றோம். நாம் வடக்கு, கிழக்கில் அரசியல் செய்வதற்கு வசதியாக அரசு எமது பாதுகாப்பை அதிகரித்துத் தரவேண்டும். என்றார்.

No comments:

Post a Comment

2024 மே நாளில் சூளுரைப்போம்!

  2024 மே நாள் வாழ்க! உலக உழைக்கும் மக்கள், மாதர், தொழிலாளர் விவசாயிகள், ஒடுக்கப்படும் தேசங்களின் ஒப்பற்ற புரட்சிகர மே தினம் நீடூழி வாழ்க!! ...