Wednesday 4 January 2017

`வாடிய பயிரைக் கண்டு` வாழ்வை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகள்!



`வாடிய பயிரைக்கண்டு` வாழ்வை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகள்.

பயிர்கள் கருகியதால் ஒரே நாளில் 12 விவசாயிகள் மரணம் - பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு

சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகியதால் நாகை, கடலூர், விருதுநகர், திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரத்தில் 12 விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். விவசாயிகளின் பலி எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.

By: Mayura Akilan
Updated: Wednesday, January 4, 2017, 2:35 [IST]  

சென்னை: பருவமழை பொய்த்து போனதால் தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருகின்றன. இதைப்பார்த்து மனம் உடைந்து தற்கொலை செய்தும், மாரடைப்பு ஏற்பட்டும் விவசாயிகள் இறக்கின்றனர். ஏற்கனவே
தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்பலியான நிலையில் மேலும் 12 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே அய்யடிமங்கலத்தில் விவசாயி கல்யாணசுந்தரம் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் கருகியதால் அதிர்ச்சியில் கல்யாணசுந்தரத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு
உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 4 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செஞ்சி அருகே தேவதானம்பேட்டை கிராமத்தில் விவசாயி முருகன்,50 தூக்கில் தொங்கி தற்கொலை செய்து
கொண்டார். மூன்றரை ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிர் கருகியதால் விவசாயி முருகன் மனமுடைந்தார்.

விழுப்புரம் அருகே கரும்புப் பயிர் கருகியதால் மகாலிங்கம் என்ற விவசாயி உயிரிழந்துள்ளார். அதனூர் கிராமத்தில் வயலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மாரடைப்பில் மரணம்

சீர்காழி அருகே அரசாளமங்கலத்தில் முருகேசன் பயிரிட்டிருந்த 2 ஏக்கர் நெய்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிரை கண்ட விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கடலூர் மாவட்டம்
காட்டுமன்னார்கோவில் அருகே நெய்வாசல் கிராமத்தில் கருகிய நெற்பயிரை கண்ட பாலையாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

விவசாயி தற்கொலை

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த திருக்குவளை அருகே கீழநாட்டிருப்பு கிராமத்தை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் ,53. தனது 3 ஏக்கர் நிலத்தில் நடவு செய்திருந்த சம்பா பயிர்கள் கருக தொடங்கியதை பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகி ஞாயிறன்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகையில் 4 விவசாயிகள் மரணம்

கீழ்வேளூர் அடுத்த வெண்மணி அருகே மேல காவாலக்குடியை சேர்ந்த விவசாயி தம்புசாமி,57 தான் 2 ஏக்கர் நிலத்தில் விதைப்பு செய்திருந்த சம்பா பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகியதை கண்டு இவர்,
ஞாயிறன்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு வயலிலேயே விழுந்து இறந்தார். கடந்த 3 தினங்களில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி, தஞ்சாவூர் விவசாயி

சிவகாசி அப்பய்யா என்ற விவசாயி சாகுபடி செய்த பயிர்கள் கருகியதால் மன உளைச்சலில் இருந்தார். மாரடைப்பால் நேற்று காலையில் மரணமடைந்தார். அதேபோல் தஞ்சை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம் மாரடைப்பால் உயிரிழந்தார். ஒரு ஏக்கரில் நெற்பயிர் கருகியதால் அதிர்ச்சியில் வயலில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

81 பேர் பலியான சோகம்

பயிர்கள் கருகியதால் டெல்டா மாவட்டங்களில் மட்டும் இதுவரை 55 பேர் பலியாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பருவமழை பொய்த்துப்போய் கடும் வறட்சியினால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகியதால் தமிழகம் முழுவதும் இதுவரை 81 பேர் பலியாகி விட்டனர் என்பதுதான் சோகம்.
==============================
விவசாயிகள் தினத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை- தமிழகத்தில் இதுவரை 34 பேர் பலி

நாகை மாவட்டத்தில் சாகுபடி செய்த பயிர்கள் கருகியதால் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் இதுவரை 34 விவசாயிகள் மரணமடைந்துள்ளனர்.

By: Mayura Akilan
Published: Friday, December 23, 2016, 18:13 [IST]  

தஞ்சாவூர்: இந்தியாவில் இன்று விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் வறட்சி, மறுபக்கம் வெள்ளம் என நாடு முழுவதும் விவசாயிகள் கடும் துன்பத்தை சந்தித்து வருகின்றனர்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுத்து விட்டது. வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் பயிர்கள் கருகி அழிந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் உடைந்து விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணமடைந்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் அதிர்ச்சியில் மரணமடைவதும் நீண்டு கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 34 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர்
மாவட்டத்தில் 5 பேரும், திருவாரூரில் 5 பேரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 1, நெல்லை மாவட்டத்தில் 1, திருவள்ளூர் மாவட்டத்தில் 1, ஈரோடு மாவட்டத்தில் 2 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆந்தைக்குடியில் விவசாயி தியாகராஜன் தற்கொலை செய்து கொண்டுள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தனது நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள்
கருகியதால் மனமுடைந்த விவசாயி தியாகராஜன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயிகள் தற்கொலை மற்றும் மனமுடைந்து உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 34 விவசாயிகளின் குடும்பங்களை முதல்வரோ, அல்லது அமைச்சர்களோ
யாரும் நேரில் சந்தித்து இதுவரை ஆறுதல் கூட கூறவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.
விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கவும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரியும் விவசாயிகளும், எதிர்கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை நெல் சாகுபடி நடைபெறவில்லை. ஒருபோக சம்பா நெல் சாகுபடியிலாவது பிழைத்துக் கொள்ளாலம் என நினைத்த தமிழக விவசாயிகளின் கனவு இந்த ஆண்டும்
பலிக்கவில்லை. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...