Tuesday 28 October 2014

இலங்கை கடற்படை தளபதிக்கு விருது: வைகோ கண்டனம்




இலங்கை கடற்படை தளபதிக்கு விருது: வைகோ கண்டனம்

சனிக்கிழமை, 25 ஒக்டோபர் 2014 14:12

இலங்கை கடற்படை தளபதி ஜயந்த பெரேராவுக்கு இந்திய கடற்படையின் வீர விருது கொடுக்கப்பட இருப்பதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'உலகின் பூர்வகுடி மக்களான தமிழர்களின் நெடிய வரலாற்றில் தமிழ் இனத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பமும் கேடும் போல இதுவரையில் நேர்ந்ததில்லை.

இலங்கைத் தீவில் எங்கள் தொப்புள் கொடி உறவுகளான தமிழர்கள் சிங்கள இனவாத அரசால் இலட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர்.

எங்கள் தாய்மார்கள், சகோதரிகளின் கற்பு சூரையாடப்பட்டு, இராணுவத்தினரால் வதைத்துக் கொல்லப்பட்டனர். வயது முதிர்ந்தோர், குழந்தைகள், ஆயுதம் ஏந்தாத அப்பாவிகள் என எவரையும் விட்டுவைக்கவில்லை.

உலகம் தடை செய்த குண்டுகளை பயன்படுத்தி அழித்தனர். சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணக் காணொளிகளில் நிரூபிக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் மனிதாபிமானமுள்ளோர் இதயங்களை நடுங்கச் செய்தன.

இந்தத் தமிழ் இனப் படுகொலைக்கு, இந்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடந்தையாக செயற்பட்டு, கணக்கற்ற ஆயுதங்களை தந்து, இந்தியாவின் முப்படைத் தளபதிகளையும் அவ்வப்போது அனுப்பி வைத்து தமிழ் இனக்கொலை யுத்தத்தை இயக்கியது.

இந்தியாவின் முழு உதவியால்தான் நாங்கள் வெற்றிபெற்றோம் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை நாடாளுமன்றத்திலேயே கூறினார்.

ஐ.நா. மனித உரிமைக் பேரவையில், இந்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்தது. புதிய அரசு பொறுப்பேற்று ராஜபக்ஷவை இந்தியாவுக்கு வரவழைத்தபோதே அதை தடுப்பதற்காக  நரேந்திர மோடியிடம் நான் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தேன்.

ஒக்டோபர் 9ஆம் திகதியன்று இந்தியாவின் இராணுவ அமைச்சுத்துறை செயலாளர் ஆர்.கே.மாத்தூர், மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இலங்கையிடம் இருந்துதான் நாங்கள் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று கூறியுள்ளார்.

பச்சைக் குழந்தைகளையும் கர்ப்பிணிப் பெண்களையும் கொல்வதும், இளம் பெண்களைக் கற்பழித்துக் கொலை செய்வதும் இந்துக் கோவில்களைத் தாக்குவதும் மருத்துவமனைகள் மீது குண்டு வீசி நோயாளிகளைக் கொல்வதும் உலகம் தடை செய்த குண்டுகளை வீசி பொதுமக்களை பலியிடுவதும் இவையெல்லாம் இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களா?
இது மட்டுமல்ல, இலங்கை இராணுவ அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள இராணுவத்தினருக்கு  வகுப்பு நடத்தப் போகிறார்களாம்.

பயிற்சி கொடுக்கப் போகிறார்களாம். அதற்கும் ஏற்பாடாகியிருக்கிறது. இன்னொரு கொடுமை நடக்கப் போகிறது. இலங்கையினுடைய கடற்படையின் தளபதி ஜயந்த பெரேரா, புதுடெல்லிக்கு வரப்போகிறார்.

அவருக்கு 27ஆம் திகதி இந்தியக் கடற்படை வீர விருது மரியாதை செலுத்தப் போகிறதாம். எதற்காக? 578 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றதற்கா என்றும் அவர் வினவியுள்ளார்.

பாரத ரத்னா விருதா?

முன்னைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களுக்கு உதவியபோதும் ஒளிவு மறைவாக செய்தது. கடைசிக் கட்டத்தில் பயந்து பின்வாங்கியது.

ஆனால், பாரதிய ஜனதா அரசு, இலங்கை அரசாங்கத்துக்கு  வெளிப்படையாகவே உதவுகிறது. அதனால்தான் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி, தமிழ் இனத்தை அழித்தவருக்கு  பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகச் சொல்ல முடிகிறது.

ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமியால், மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகச் சொல்ல முடிகிறது. எங்கள் நெஞ்சம் கொதிக்கிறது. ஜாலியன் வாலாபாக்கிலே படுகொலை நடத்தினானே ஜென்ரல் டயர் அவனுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கச் சொன்னால் எப்படியோ!

அதுபோன்றதுதான் ராஜபக்ஷவுக்கு விருது கொடுக்கச் சொல்வது. இப்படிச் சொன்னதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைமையோ, பிரதமரோ இதுவரை கண்டித்தார்களா? இல்லை. அவரது தனிப்பட்ட கருத்து என்று சொல்லி பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.

வெந்த புண்ணில் வேல் வீசுகிறது இந்திய அரசு. மான உணர்ச்சி தமிழ்நாட்டில் அழிந்துவிடவில்லை. அது அழியாது. அது ஆயிரங்காலத்துப் பயிர். அதனால்தான் முத்துக்குமார்கள் தீக்குளித்து மடிந்தார்கள். பொதுபாலசேனா உள்ளிட்ட சிங்கள தீவிரவாத அமைப்புகள் 'இஸ்லாமியர்களை எதிர்ப்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்து வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.

இஸ்லாமிய பள்ளிவாசல்களையும், கிறித்தவ தேவாலயங்களையும் இந்துக் கோவில்களையும் தாக்குகிறார்கள். ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்கள், சிவன் கோவில், முருகன் கோவில், காளி கோவில் என ஈழத்தில் நொறுக்கப்பட்டனவே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

உல்லாச புரியாகும் மைய மலையகமும், Spain இல் உல்லாசத் துறை எதிர்ப்பும்.

Thousands protest in Spain's Canary Islands over mass tourism By  Borja Suarez    April 21, 2024   SANTA CRUZ DE TENERIFE, Spain, April ...