Monday 20 October 2014

ஜெயா பிணை: சிறீதரனின் மகிழ்ச்சிப் புகழாரம்.

File Photo MP Sritharan
உலகத் தமிழர்களின் பெரு மகிழ்ச்சி உங்கள் விடுதலை: ஜெயலலிதா அம்மையாருக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் புகழாரம்

[ திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2014, 09:48.51 AM GMT ]

இந்தியா பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழகத்தை வழி நடத்தும் அ.இ.அ.தி.மு.கவின் பெருந்தலைவியும் தமிழ் மக்களின் நம்பிக்கையுமான அம்மையார் ஜெயலலிதாவிற்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் பகிரங்க மடலொன்றில் வாழ்த்தையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளார்.
அவர் தன் மடலில்,

தமிழர்களின் நம்பிக்கையும் தாய்த் தமிழகத்தின் பெருந்தலைவியும் முன்னாள் முதல்வருமான மாண்புமிகு ஜெயலலிலதா அம்மையார் அவர்களே!

பெங்களூர் சிறையில் இருந்து நீங்கள் விடுதலையாகி மீண்டும் தமிழ்நாட்டு மண்ணில் கால்பதித்த போது உலகத்தமிழர்களின் இதயங்கள் குளிர்ந்து போனது.

ஒரு இரும்புப் பெண்மணியாக துணிவுடன் இலங்கையில் வாழும் தமிழர்களாகிய எமது மக்களின் வாழ்வின் விடிவுக்காக நீங்கள் உங்கள் ஆட்சியில் தமிழக சட்ட சபையில் நிறைவேற்றியிருக்கின்ற தீர்மானங்களும் எமது மக்களுக்காக நீங்களும் உங்கள் ஆட்சிபீடமும் தமிழ்நாடும் செய்து வருகின்ற அளப்பரிய கடமைகளும் உங்களை தமிழர்களின் மனதில் நீங்கா இடத்தில் ஏற்றிவைத்துள்ளன.

இலங்கை அராஜக ஆட்சிபீடத்தோடு நெருங்கிய உறவைபேணும் ஒருவரின் சதியால் நீங்கள் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது தமிழர்களின் இதயங்கள் அதிர்ந்துபோனது.

அந்தத் தீர்ப்பு தமிழர்களுக்கு எதிரான தீர்ப்பாகவே மனதில் எண்ணத்தோன்றியது. இலங்கையில் வாழும் தமிழர்களும் புலம்பெயர்ந்து உலகநாடுகளில் அகதிகளாய் வாழும் தமிழர்களும் உயிர்களை இலட்சங்களாய் இழந்து சொத்துக்களை இழந்து ஆக்கிரமிப்பாளர்களின் போரின்போது காணாமல்போன தம் உறவுகளை தேடி அலைந்து இன்னமும் திறந்த வெளிச்சிறைகளுக்குள் கண்ணீருடன் இலங்கை அரசாங்கத்தால் உரிமைகள் மறுக்கப்பட்டு வாழும் நிலையில் ஒரு நம்பிக்கை ஒளியாக கலங்கரையாக நீங்கள் தோன்றினீர்கள்.

அதனால் உங்களுக்கு நேர்கிற இடர்கள் சதிகள் உலகில் வாழும் தமிழர்களுக்கு நிகழ்வதற்கு ஒப்பானது.

தமிழகம் எப்போதும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்து நாம் துயர்படுகின்றபோது இதயம் விம்மியது மட்டுமல்லாமல் எமது விடுதலைப்பயிர் வளர நீரூற்றி வந்திருக்கின்றது.

தமிழகத்தின் பல கோடிக்கணக்கான உறவுகள் நாம் வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கு தம் உயிர் கொடுக்கவும் சித்தமாயிருந்து வந்துள்ளார்கள். தமிழக கானகங்களில் தான் எம்வீரம் முறுக்கேறி வளர்ந்தது.

அதற்கு காரணம் என்றும் தமிழர்களின் இதயக்கனியாக இருக்கக்கூடிய மாண்புமிகு முன்னாள் முதல்வர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் அத்திவாரம் உயிர்நாடி அமரர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களே.

இன்றைக்கு அந்த பொன்மனச் செம்மலின் வடிவமாகவும் உள்ளமாகவும் தமிழர்கள் உங்களை காண்கின்றனர். நீங்கள் தமிழர்களின் இதயத்துடிப்பை உணர்ந்துள்ளீர்கள். உங்களை சிறையில் அடைத்தது அதர்மம். ஆனால் அதர்மத்தால் உங்கள் தர்மத்தின் முன் ஈடுகொடுக்க முடியவில்லை.

அதனால் குறுகிய நாட்களிலேயே தோற்றுப்போயிற்று. இனியும் உங்களுக்கு முன்னால் வரும் தடைகள் யாவும் உடையும் நிச்சயம் நீங்கள் உடைப்பீர்கள் என உலகமெலாம் வாழும் தமிழரகள் நம்புகின்றனர்.

அதற்கு நீங்கள் சிறைசென்ற போது உயிர்கொடுத்தவர்களே சாட்சி. அந்த உறவுகளுக்கு ஈழத்தமிழர்கள் சார்பில் எமது அஞ்சலிகள்.

மாண்புமிகு தமிழகத்தின் நம்பிக்கை ஒளி அ.இ.அ.தி.மு.கவின் பெருந்தலைவி அவர்களே!

இனிவருங்காலம் தமிழர்களுக்கு மிகமுக்கியமான காலமென்றே சொல்லலாம். தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற காலமெனவும் சொல்லலாம். இந்தத் தருணத்தில் நீங்கள் எங்களோடு இருப்பது நம்பிக்கை தருகின்றது.

இலங்கை தமிழர்களின் நெடுங்கால உரிமைப்பிரச்சனையை தீர்த்துவைப்பதில் இந்தியாவின் பங்கு பிரதானமானது. அதில் தமிழகத்தின் பங்கு மிகமிக முக்கியமானது என்பதை உலகம் உணர்ந்திருக்கின்றது.

எனவே உங்கள் காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு நிரந்தரமான உரிமைகள் கிடைத்த அமைதியான சுதந்திரமான வாழ்வு பெறுவதற்கு ஈழத்தமிழினம் உங்களை தெய்வத்திற்கு நிகராக போற்றியும் வேண்டியும் நிற்கின்றது.

உங்கள் விடுதலையில் தமிழினம் அகமகிழ்ந்திருப்பது தமக்கு ஒரு விடுதலை உங்களால் கிடைக்கும் என்பதாலேயே. உங்கள் விடுதலை இயற்கை வெற்றிடத்தை விட்டுவைக்காமல் உங்கள் உண்மையினாலேயே நிரப்பியிருப்பதை உணர்த்தியிருக்கின்றது.

உங்கள் சத்தியமும் இலட்சியமும் தீர்மானங்களும் நிச்சயம் வெல்லவேண்டும்.  அதில் ஈழத்தமிழர்களுக்கு மகிழ்வான எதிர்காலம் உங்கள் பெயரால் உருவாகவேண்டும். உங்கள் நல்லாட்சி தொடர எமது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...