Tuesday 18 February 2014

முத்தமிழர் மரணதண்டனை ஆயுள்தண்டனையாக மாற்றம்! விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழ் நாட்டு அரசுக்கு அதிகாரம்!


மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை வரவேற்ற பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் (நடுவில்), அவரது மகள். (படம்: எம்.வேதன்)

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.

இந்த வழக்கில் 3 பேரின் சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான அமர்வு, கருணை மனுக்களை நிராகரிக்க 11 ஆண்டு கால தாமதம் செய்யப்பட்டதன் அடிப்படையில் தூக்கு தண்டனை ரத்து செய்வதாக தீர்ப்பு அளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு:

ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய முவரின் சீராய்வு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், எஸ்.கே.சிங் அடங்கிய அமர்வு காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது.

சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் குறைத்து தீர்ப்பளித்தனர்.

இருப்பினும், இந்த மூன்று பேரையும் விடுதலை செய்வதில் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432-ஐ பயன்படுத்தி 3 பேரையும் சிறையில் இருந்து மாநில அரசு விடுவிக்கலாம் என பரிந்துரைத்தனர்.

நீதிபதிகள் கருத்து:

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் சீராய்வு மனு மீதான விசாரணையில் மத்திய அரசு முன் வைத்த வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் வாதத்தை ரத்து செய்ததாக அறிவித்தது.

இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில்: "தூக்கு தண்டனை கைதிகளின் துயரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தூக்கு தண்டனை கைதிகளின் மனநிலை பற்றி அனைவரும் அறிவர்" என்றனர்.

நீதிபதிகள் நம்பிக்கை:

இனி வருங்காலங்களில் கருணை மனுக்கள் மீதான முடிவு காலம் தாழ்த்தாமல் எடுக்கப்படும் என நீதிமன்றம் நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அது மட்டும் அல்லாது, கருணை மனுக்கள் மீதான முடிவை தேவையில்லாமல் காலம் தாழ்த்த வேண்டாம் என ஜனாதிபதிக்கு அவ்வப்போது மத்திய அரசும் அறிவுறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி:

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பரிசீலிப்பதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. எனவே, ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை பிப்ரவரி 4-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்தது.

கடந்த ஜனவரி 21-ம் தேதி மற்றொரு வழக்கில் ‘கருணை மனுவை பரிசீலிப்பதில் தேவையற்ற தாமதம் செய்ததால், பாதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை மேற்கோள்காட்டியே முருகன் உள்ளிட்ட மூவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால், மனுதாரர்களின் கோரிக்கையை கடுமையாக எதிர்த்த மத்திய அரசு, “இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசு அளவுக்கு அதிகமான தாமதம் எதையும் செய்யவில்லை. இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் இதுவரை தங்கள் செயலுக்காக சிறிதும் வருந்தவில்லை என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நன்றி: தி இந்து.


முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம் - இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

[ செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2014, 00:51 GMT ] [ அ.எழிலரசன் ]

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு அரசு முடிவெடுக்கலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து 3 பேரின் சார்பில் இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், தூக்குத்தண்டனையை நிறுத்த செய்ய கோரி முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட தங்களது கருணை மனுக்கள் மீது நீண்ட காலமாக முடிவு எடுக்காமல் இருப்பதால், தண்டனையை குறைக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.சிங்வி விசாரித்து வந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு, இந்த வழக்கு முதல் முறையாக தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளி்த்தது. அதன்படி, 3 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

முன்னைய செய்தி: 

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை குறைக்கக் கோரி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், செய்த மேனமுறையீடு தொடர்பாக, இந்திய உச்சநீதிமன்றம் இன்று முக்கியமான தீர்ப்பை அளிக்கவுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு இவர்களின் மனு மீது தீர்ப்பு அளிக்கும் என்று இன்றைய உச்சநீதிமன்ற வழக்குகள் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வேறு வழக்குகளில், கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க இந்திய குடியரசுத் தலைவர் தாமதம் செய்ததால் 15 பேரின் மரணதண்டனையை உச்சநீதிமன்றம் குறைத்து, அண்மையில் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பை மேற்கோள்காட்டி, தங்களுக்கும் அதே நடைமுறையின்படி தண்டனையை குறைக்க வேண்டும் என்று முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் உச்ச திமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், அவர்களின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி:புதினப்பலகை


No comments:

Post a Comment

உல்லாச புரியாகும் மைய மலையகமும், Spain இல் உல்லாசத் துறை எதிர்ப்பும்.

Thousands protest in Spain's Canary Islands over mass tourism By  Borja Suarez    April 21, 2024   SANTA CRUZ DE TENERIFE, Spain, April ...