Sunday 6 October 2013

தோழர் தியாகு அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தின் ஒன்பது அம்சக் கோரிக்கைகள்.


தோழர் தியாகு அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தின் ஒன்பது அம்சக் கோரிக்கைகள்.

 தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 01.10.2013 இல் இருந்து சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார். இன்று 7வது நாளாக அவரது விரதம் தொடர்கின்றது.

இப்போராட்டத்தில்,ஈழத்தமிழர்களது இனக்கொலை குறித்தும்,பொதுவாக உலகு தழுவிய இனப்படுகொலைகள் குறித்தும், தமிழக மீனவர்கள், ராஜீவ் கொலை தூக்குத் தண்டனைக் கைதிகள் தொடர்பாகவும், தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழ் அகதிகள் குறித்தும்,நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாடு குறித்தும்  இந்திய மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்காக  9 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றார்.

தோழர்தியாகு: வீட்டு நூலகம்
இக்கோரிக்கைகளுடன் போராட்ட அரங்கில் `வெற்றி அல்லது வீரச்சாவு` என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.

தோழர் தியாகு அவர்கள் (01-10-13), உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்வைத்த ஒன்பது அம்சக் கோரிக்கைகள் :

1. அ) இனக்கொலை புரிந்த சிங்கள அரசைக் காமன்வெல்த்திலிருந்து நீக்கிவைக்க வேண்டும்.

ஆ) எதிர்வரும் நவம்பரில் கொழும்பில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும், காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டம், அங்கு நடைபெறக்கூடாது.

இ) காமன்வெல்த் மாநாடு கொழும்பில்தான் நடக்குமென்றால், அரசாங்கத் தலைவர்கள், குறிப்பாக இந்தியத் தலைமை அமைச்சர் அதில் கலந்துகொள்ளக்கூடாது.

2. இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இலங்கைப் படையினருக்கு எவ்விதப் பயிற்சியும் வழங்கக்கூடாது.

3. இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் `கடலடிக் கம்பி வடம்` வழியாக மின்சாரம் கொடுப்பதற்குச் செய்துள்ள ஒப்பந்தத்தை நீக்கம் செய்ய வேண்டும்.

4. சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் தடுத்து நிறுத்தும் வகையில், தமிழக மீனவர் தற்காப்புப் படை அமைத்து, மீனவ இளைஞர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்க வேண்டும்.

5. 1974, 1976 ஆண்டுகளில் இந்திய அரசும் இலங்கை அரசும் செய்துகொண்ட கச்சத்தீவு உடன்படிக்கைகளை நீக்கம் செய்து, தமிழகத்தின் பிரிக்க முடியாத பகுதியான கடச்சத்தீவை மீட்டு தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

6. அ) தமிழகத்தில் இன்னமும் செயல்பட்டுவரும் ஈழத் தமிழர் அகதி முகாம்களைக் கலைத்து விட வேண்டும்.

ஆ) அகதி உரிமை தொடர்பான ஜெனீவா உடன்படிக்கையில் இந்தியா கையொப்பமிட வேண்டும்.

இ) அகதி உரிமைகள் தொடர்பான நீதிபதி பி.என்.பகவதி குழு வரைந்துள்ள மாதிரிச் சட்ட முன்வடிவை, இந்திய அரசு, உடனடியாக நாடாளுமன்றத்தில் முன்வைத்து சட்டமாக்க வேண்டும்.

ஈ) தமிழீழ அகதிகளை இந்தியக் குடிமக்களுக்கு நிகராக நடத்தும் வகையில், அவர்களுக்கு இடைக்கால இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.

உ) தமிழகத்தில் வாழும் தமிழீழ மக்களின் பொருளியல், குடியியல், அரசியல் உரிமைகளை இந்திய அரசும் தமிழக அரசும் முழுமையாக மதித்து நடக்க வேண்டும்.

ஊ) ஈழத் தமிழ் அகதிகள் எவரையும் அவர்களது விருப்பத்திற்குப் புறம்பாக இலங்கைக்கு திருப்பி அனுப்புவதோ, இந்தியாவைவிட்டு வெளியேற்றுவதோ கூடாது.

7. இராசீவ் கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டுத் தூக்குக் கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் , வாழ் நாள் சிறைப்பட்டுள்ள நளினி, ராபர்ட் பயஸ், செயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய எழுவரையும், அவர்கள் இருபதாண்டு

காலத்துக்கு மேல் சிறையில் கழித்துவிட்டதைக் கருத்தில்கொண்டு, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

8. உலகத் தமிழர்களின் ஒருமித்த கோரிக்கை என்ற முறையில், தமிழகச் சட்டப்பேரவை 2013 மார்ச் 27 ஆம் நாள் இயற்றிய தீர்மானத்தின்படி,

அ) இராசபக்சேவின் சிங்கள அரசு, தமிழீழ மக்களுக்கு எதிராகச் செய்த போர்க்குற்றங்கள் மற்றும் மானுட விரோதக் குற்றங்கள் குறித்து, தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்த வேண்டும்.

ஆ) ஏழை மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் கட்டமைப்பில் இனக்கொலையைத் தடுத்து நிறுத்த, பன்னாட்டுப் பாதுகாப்புப் பொறியமைவுக்கு வழிவகை செய்ய வேண்டும்.

இ) ஈழத்தின் எதிர்காலத்தைத் தீர்வு செய்யும் வகையில், தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஈழத் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

9. சிங்கள அரசு, தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்கும்படி , அவ்வரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் - என்ற தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்திற்கு, இந்திய அரசு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.
 
தோழர் தியாகு: தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர்

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...