Wednesday 14 March 2012

பெண் போராளிகளைக் களங்கப்படுத்துவது உடன் நிறுத்தப்படவேண்டும்!

நிமிடத்திற்கு நிமிடம், தமிழ் இணைய ஊடகங்களால் நிர்வாணப்படுத்தப்படும் பெண் போராளிகள்!

சிங்களவன் செய்த கொடூரத்திலும் பார்க்க, இவர்கள் நடாத்தும் வியாபாரம் மிக... மிக... அதிகமாக உள்ளது...' என்று கலங்குகின்றார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

'புதிய போர்க் குற்றப் படங்கள் காட்டுகின்றோம்... எங்கள் இணைய தளத்திற்கு வாருங்கள்...' என்று வலிந்திழுக்கும் வர்த்தக நோக்கத்துடன் தமிழ் இணையங்கள் சில வெளியிடும் சிங்களப் படைகளால் கோரமாகக் கொல்லப்பட்ட போராளிகளது படங்களும், அவலக் காட்சிகளும் தமிழ் நெஞ்சங்களைக் கோபமூட்டி வருகின்றன. அதுவும், பெண் போராளிகளது நிர்வாணப்படுத்தப்பட்ட காட்சிப் பதிவுகளை 'ப்ளாஷ்' தொழில் நுட்ப உதவியுடன் தொடர் மின்னல் காட்சிகளாகப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது மிகக் கொடூரமான ஈனச் செயலாகவே நோக்கப்படுகின்றது.

போர்க் குற்றப் படங்கள் தமிழ் மக்களுக்கான காட்சிப்படுத்தல்களுக்குரியவை அல்ல என்பதை பொறுப்பற்ற சில இணையத் தளங்கள் புரிந்து கொள்வதில்லை. கோரமான, கொடூரமான படங்களை இணைத் தளங்களில் பார்வைக்குப் பதிவு செய்வதை அங்கீகரிக்காத நாடுகளில் வாழும்  சிலரால் நடாத்தப்படும் இணையத் தளங்கள் தமிழ்ப் போராளிகளது கோரமாகக் கொலை செய்யப்பட்ட படங்களையும், பெண் போராளிகளது சீரழிக்கப்பட்டு, சின்னாபின்னப்படுத்தப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்ட ஆடைகள் அற்ற உடல்களையும் காட்சிப் பொருட்களாக்கியுள்ளன.

இந்த இணையத் தளங்களால் மின்னும் காட்சிகளாக்கப்பட்ட அந்தப் பெண் போராளி ஒருவேளை அதன் பொறுப்பாளர்களது தங்கையாக இருந்திருந்தால், தாயாக இருந்திருந்தால் இப்படித்தான் காண்பித்து நிறைவடைந்திருப்பார்களா? என சமூக அக்கறையுள்ள மனிதர்கள் கொதித்துப் போயுள்ளார்கள்.

போர்க் குற்றத்திற்காக அடையாளப்படுத்த வேண்டிய காட்சிகளாக இருந்தால், குறைந்தபட்சம் அவர்களது முகங்களையாவது மறைத்திருக்க வேண்டும். நாகரீகமடைந்த ஊடகவியலாளாகள் கோரமான காட்சிகளை வண்ணமிழக்கப்பண்ணி, கறுப்பு வெள்ளையாகக் காட்சிப்படுத்துவதும் உண்டு. ஆனால், சில தமிழ் இணையங்கள் மனங்களில் எந்தவித சலனமும் இன்றி எங்கள் தேசத்தின் ஆன்மாக்களை நிர்வாணமாகவே காட்சிக்கு விடுவதில் போட்டி போடுவதைத்தான் அவதானிக்க முடிகின்றது.

தமிழ் இணையத் தளங்களை நடாத்துபவர்கள் தயவு செய்து மனம் கோணாமல் எங்கள் மக்களது மன வருத்தங்களைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் கிடைக்கக்கூடிய போர்க் குற்ற ஆதாரங்களை அதற்குரிய இடங்களில் சமர்ப்பியுங்கள். உங்கள் இணையத் தளங்களில் அந்தப் படங்களைப் பதிவு செய்யும்போது, அவற்றை, உங்கள் உடன் பிறந்தவாகளது படங்களாக எண்ணி, அதற்குரிய மரியாதையை வழங்குங்கள். கண்ணியத்துடன் செய்திகளை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

நீங்கள் தெரிந்தோ, தெரியாமலோ எங்கள் மனங்களை ரணப்படுத்துகின்றீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். எங்களில் பலர் அந்தப் படங்களில் உள்ளவர்களது இரத்த உறவுகள், தோழர்கள், பெற்றவர்கள், வளர்த்தவர்கள் என அத்தனை நெருக்கமானவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எங்கள் போராளிகளை உங்களுக்கான விளம்பரப் பொருட்களாக்கிவிடாதீர்கள். மரணித்த எங்கள் பெண் போராளிகளை நிமிடத்திற்கு நிமிடம் நிர்வாணப்படுத்தாதீர்கள்!

- ஈழநாடு
==================
பிற்குறிப்பு:
இந்த இழிசெயலில் இறங்கியிருப்பவை  இணையங்கள் மட்டுமல்ல இனமானத் தமிழ்ச் சிங்கங்களும்தான். மேடைப்பேச்சுக்களில் இருந்து ஆவணப்படங்கள் வரை இந்த அயோக்கியத்தனம் மலிந்து கிடக்கின்றது. வை.கோவின் ஆவணப்படம் இதற்கு சிகரமாகவுள்ளது.
ஒரு ஆதாரத்துக்காக இவை தேவைப்பட்ட காலம் முடிந்துவிட்டது.  குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுவிட்டது. `கற்பழிப்புக் காட்சியில் ` சுகம் காணுவது அற்ப  அரை  நிலப்பிரபுத்துவப் பண்பாடாகும்.

No comments:

Post a Comment

Xi meets Sri Lankan PM

This handout photograph released by Sri Lanka Prime Minister’s Office on March 27, 2024 shows Sri Lanka’s Prime Minister Dinesh Gunawardena ...